Saturday, August 07, 2010

ரெட் பேனாவும் சமுதாய மாறுதலும்

’..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.

-----------------------------------------------------------------------------
என் பேர் கோபால். எல்லாரப் போலவும் படிச்சிட்டு, வேலை வாங்கி சென்னைல கொஞ்ச நாள் குப்பை கொட்டிட்டு இப்போ அமெரிக்கால வந்து ட்ராஷ் கொட்டிட்டு இருக்கேன். விஜி, என் அக்கா, பொறுமைசாலி எதையும் நிறுத்தி நிதானமாய் செய்பவள். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள். அது என்னமோ தெரில எனக்கு விவரம் தெரிஞ்சு பொறந்தால பசங்க மேல எனக்கு அவ்வளவு பிரியம்.
ஒரு மாமா என்ன பண்ணனும்ன்னு என் நண்பர்கள் என்ன பாத்துதான் கத்துகிட்டங்க.

எனக்கு பாசத்த பேச்சுல காட்றது பிடிக்காது. எதுன்னாலும் செயல்ல இருக்கணும். இந்தியாவில இருக்கும் போதே அவங்களுக்கு பிடிச்ச விஷயத்த செய்யாம இருக்க மாட்டேன். இங்க வந்து சொல்லணுமா?

போன தடவ ஊருக்கு போறத்துக்கு முன்னாடி போன் பண்ணினேன்.

‘ஏய் பசங்களா, என்ன வேணும் உங்களுக்கு?’
‘கலர் பென்சில், கலர் பேனா, வீடியோ கேம், .......’ என்று அவர்களது பட்டியல் நீண்டுகொண்டே போனது....
விஜி அவர்களிடம்... ‘ஹேய்.. போதும்டா எவ்வள்வுடா வாங்கிட்டு வருவான் அவன்...’ என்று அதட்டினாள். நான் அவளை அதட்டினேன்.

இந்தியா சென்றபோது அவர்கள் எதிர் பார்த்ததை விட நிறைய பொருட்கள் வாங்கிச் சென்றேன். பசங்களை ஏமாற்றுவது என்றும் எனக்கு பிடிக்காது. என் அக்காவோ, சின்ன ஏமாற்றங்கள் இருக்கணும்ன்னு சொல்லுவாள். அப்போதான் பிள்ளைங்க பிற்காலத்துல ஏமாற்றங்களை தாங்குவாங்களாம். சுத்தப் பேத்தல்.

அன்று அவர்கள் அந்த பேனாவில் எழுதி மகிழ்ந்தது, யப்பா என்ன சந்தோஷம். ‘டேய் கோபால் சாதிச்சுட்ட’ அப்படின்னு எனக்கு நானே தோள் தட்டிக்கொண்டேன். இந்தியப் பயணம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு தொலைபேசினேன், அப்போதுதான் கல்யாணி (அக்கா மகள்) சொன்னாள்

‘மாமா... நீ வாங்கிட்டு வந்ததுல எனக்கு ரெட் கலர் பேனாதான் பிடிச்சது.... ஆனா அது தொலஞ்சுபோச்சு’
‘சரி... நான் வாங்கி அனுப்பறேன்..’ என்று கூறினேன்.
‘சூப்பர் மாமா’ என்று குதுகலித்தாள்.

அடுத்த நாள் கல்யாணி எனக்கு போன் செய்தாள்.
‘என்னடா கல்லுக் குட்டி...’
’மாமா... அந்த ரெட் பேனாவ திருட்டு ராதிகாதான் எடுத்திருக்கா, மல்லிக்கா மிஸ் குடுத்தாங்க’ என்றாள்.
’ஏய்... அப்படி சொல்லதன்னு சொல்லிருக்கேன் இல்ல...’ சட்டென விஜி போனை வாங்கினாள்.

‘டேய்... அந்த ராதிகா, மல்லிக்கா மிஸ் பொண்ணு. அவங்களுக்கு இருக்கற வருமானமே தையல் மிஷனும், டியூஷனும்தான். சரி நாமளும் உதவி பண்ணின மாதிரி இருக்கும், பசங்களும் படிச்ச மாதிரி இருக்கும்ன்னு டியூஷன் அனுப்பினேன்’

‘ஹ்ம்ம்..’

‘அந்த பொண்ணுக்கு இந்த மாதிரி பேனாவெல்லாம் வாங்கற வசதி இல்ல. சின்ன பொண்ணு பார்த்ததும் ஆசப் பட்டு எடுத்துட்டா. இது அந்த பொண்ணு தப்பும் இல்ல அறியாப் பொண்ணு. இப்போ இதுனால அந்த பொண்ண எல்லாரும் திருட்டு ராதிகான்னு கூப்பிடறாங்க. இவக்கிட்ட சொல்லிருக்கேன், இன்னொரு தடவ அப்படி சொன்ன சூடு போடுவேன் அப்படின்னு ’

‘சரி அதான் பேனா வந்துருசில்ல’

‘பேனா வந்துருச்சு. ஆனா அந்த பொண்ணு மனசுல இந்த தப்பான எண்ணம் வர நாம காரணம் இல்லயா? இது மாதிரி நாம செய்யற சின்ன விஷயம் பெரிய மாறுதல்கள சமுதாயத்துல ஏற்படுத்துது. இதுல ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.

அவள் கடைசியில் சொன்ன வார்த்தைகள் எனது எண்ணங்களை புரட்டிப் போட்டது. இதுக்கு நான் என்ன செய்ய முடியும். ஆனா ஏதாவது செஞ்சுதான் ஆகணும். பசங்களும் சந்தோஷமா இருக்கணும், சமுதாயமும் இதுனால கெடக் கூடாது. எதாவது வழி இருந்த்தா சொல்லுங்களேன் ப்ளீஸ்......






Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online