Wednesday, May 19, 2010

நேற்று பெய்த மழையில்...


இந்த கதையை சென்னையை ஆட்டுவிக்கும் லைலா புயலுக்கு சமர்பிக்கிறேன்.

புகைப்படம்: நன்றி அவ்யுக்தா கீர்த்தி

நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையில், இன்று ஈரச்சேலை அணிந்திருந்தாள் சாலைப்பெண். மழை நீரை குடித்து பள்ளங்கள் தங்களது வயிற்றை நிரப்பி காட்சியளித்தன.

"யூஸ்லெஸ் ஃபெல்லோ" என்று சத்தமாக கத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக நடந்துகொண்டிருந்தார் திருவாளர் காளிதாஸ். தாஸ் அண்ட் கோ முதலாளி. சாதாரணமாக இருந்த தொழிலை இன்று பல நாடுகளுக்கு கொண்டு சென்றவர். வேலை விஷயத்தில் பயங்கர கறார் பேர்வழி.சொன்ன நேரத்தில் சொன்ன வேலை முடியவில்லை என்றால் மனிதன் ஆகாசத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிடுவார். சில நேரங்களில் இவர் மனிதாபிமானமற்றவர் என்று மற்றவர் சொல்லும் அளவிற்கு நடப்பார். இவ்வளவு கோவக்காரறாய் இருந்தாலும், தனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால், அனைவரையும் தனது பிள்ளையை போல பார்த்துக்கொள்வார்.
'எல்லாருக்கும் பொறுப்பு இருக்கணும்ன்னு நெனைக்கறது தப்பா?' என்று கேட்பார்.
'அதுக்குன்னு அவங்களுக்கு வேற முக்கியமான வேல இருக்கலாம் இல்லீங்களா?' என்றால்.
'அவனுக்கு என்ன குடி முழுகி போற வேல, இங்க வராம?' என்று அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார்.

'சரோஜா, இந்தா ஐயாவுக்கு காப்பி கொண்டு போ... ஆறிட போகுது' காளிதாஸ் மனைவி செண்பகம் வேலைக்காரியிடம் காபியை நீட்டினாள்.
'அம்மா, ஆறினாலும் ஐயா சூடா இருகாரு... ' என்று சரோஜா காமெடி பண்ண... செண்பகம் முறைத்தாள், மனதிற்குள் சிரித்தபடி.

காபியை சரோஜா நீட்ட, 'இது ஒண்ணுதான் கொறச்சல், கொண்டு போய் கீழ கொட்டு' என்று எரிந்து விழுந்தார்.

'அம்மா, மூஞ்சி செவந்துருக்கான்னு பாருங்க... '
'ஏண்டி...'
'ஐயா நெருப்ப மூஞ்சில துப்பிடாறு, என்னத்துக்கு ஐயா இம்புட்டு சூடா இருக்காரு'
'கணேசன் இன்னும் வரல இல்ல அதான்'

கணேசன், அவரது டிரைவர். காலை எட்டு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். இன்னும் ஆளக்காணோம். மணி ஒன்பது.

'நேத்து பேய் மழை பெஞ்சதுல, எதுனாச்சும் பிரச்சனையா இருக்கும்'
'உனக்கு அவர பத்தி தெரியாதா, அதெல்லாம் அவரு பொருட்டே பண்ண மாட்டாரு. நேத்துக்கூட அவர் பியோன் உடம்பு சரியில்லன்னு லடே-ஆ வந்தானாம், அவன பத்துநாள் சஸ்பென்ட் பண்ணிட்டார்'
'அம்மா என்னதான் இருந்தாலும்......' சரோஜா இழுக்க
'என்னடி...' செண்பகம் அதட்டினாள்
'ஒண்ணுமில்லைம்மா...' என்று சொல்ல வந்ததை மென்று முழுங்கிவிட்டாள்.

'என்னங்க, அவனுக்கு போன் பண்ணி பார்க்க வேண்டியதுதான?' என்று அம்மா கேட்க
'போன் பண்ணி பாத்தாச்சு, கன்ட்ரி ஃப்ருட், என்ன பண்றானோ, இன்னிக்கு அவன் சீட்ட கிழிக்கணும்'

'அம்மா, ஐயா இப்போதான காபி குடிச்சாறு, இப்போ ஏதோ ஃப்ருட் ஜூஸ் கேக்கறாரா?'
'நீ உன் வேலைய பாரேன், யாரு என்ன பேசறாங்கன்னு கேகரதுல நேரத்த செலவழி'

அங்கும் இங்கும் நடந்த தாஸ், சோபாவில் அமர்ந்து டிவி-யை தட்டினார். சன் நியூஸ் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

'நேற்று பெய்த அடைமழையால், சென்னை வேளச்சேரி பகுதியில் அனைத்து வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.' இங்கு இருக்கும் மக்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாப்போம். கேமேராவை திருப்பினால், கணேசன் வெள்ளை சட்டை மாட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

'சார், நகருங்க சார். வேலைக்கு ஏற்கனவே நேரம் ஆச்சு. முதலாளி காத்துட்டு இருப்பார்'
'என்ன சார், உங்க வீடு தண்ணீல இருக்கு. வேலைக்கு போறேன்னு கெளம்புறீங்க'
'சார், நான் இருந்தாலும் தண்ணி லெவல் கொறஞ்சதும்தான் ஏதும் பண்ண முடியும். என் பொண்டாட்டி தண்ணி அள்ளி வெளிய ஊத்தினப்புறம் வந்து பாத்துக்கலாம்'
'இதோ இந்த தொழிலாளி, குடியே முழுகினாலும் வேலைக்கு செல்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது முதலாளி கொடுத்துவைத்தவர்'

இதை கேட்ட காளிதாஸ் அவரின் கண்ணில் நீர் வந்தது. நேற்று பெய்த மழையில், இன்று இவர் மனதில் ஈரம்.


2 Comments:

பனித்துளி சங்கர் said...

மாறுபட்டக் கோணத்தில் கதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

பத்மநாபன் said...

தலைப்பை பார்த்தவுடன் , ``இன்று முளைத்த காளான் என்று கதை முடியும் என்று நினைத்தென் ..வேறு `நாட்` பிடித்து கதை கொண்டு வந்த விதம் நன்றாக இருந்தது....

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online