Thursday, December 09, 2010

செம்ம அடி...

அடின்னு சொன்னாலே நம்ம வெத்தலை பாக்கு தமிழைய்யா பசங்கள துரத்தி துரத்தி டஸ்டர்ல அடிப்பார், அதுதான் ஞாபகம் வரும். அவரு கிளாஸ்க்கு வரதே தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசி பத்து நிமிடங்கள்தான், அதுல இந்த காமெடிலாம் நடக்கும். இது மாதிரி ஒவ்வொரு வாத்தியார் ஒவ்வொரு மாதிரி அடிப்பாங்க, சோஷியல் வாத்தியார் ரெண்டு கையாலும் எழுதுவார், அடிப்பார் - தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பார். எல்லா நாளும் மதியம் சாப்பிட்டதும் படிக்கணும், இல்லாட்டி ரவுண்ட்ஸ் வரும் நம்ம இஞ்சி இடுப்பு வாத்தியார் குச்சி வெச்சு மண்டையில அடிப்பார். சும்மா உக்காந்தாலே தூக்கம் தள்ளும், இதுல சாப்பிட்டு உக்காந்தா... எப்படியோஅவர் வரும்போது மட்டும் இரண்டு வரிகளை திரும்ப திரும்ப சொல்லி படிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடமா, கேட்கவே வேண்டாம் பசங்களுக்கு சராமாரியா திட்டு விழும், பசங்களும் ஏதோ சிம்ரன் (அப்போ சிம்ரன் தான் ஃபேமஸ்) வந்து ஐ லவ் யூ சொன்ன மாதிரி இளிச்சிகிட்டு நிப்பாங்க.


அடிகள் ரெண்டு வகைப்படும், ஒன்னு முதலில் சொன்ன துடைச்சுவிட்டு போகும் சும்மா அடி, இன்னொன்னு, நான் சொல்லப் போகும் செம்ம அடி. செம்ம அடிங்கறது, மெண்ட்டலி பாதிக்கக் கூடிய அடி. இது வாங்கினால் சுலபத்தில் அழியாது. கடந்த வாரத்தில் இது போல இரண்டு விஷயங்கள் நடந்தது.

கிரிக்கெட் என்றாலே தாங்கள்தான் என்று மார்த்தட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை தற்போது முழு வேகத்தில் இயங்கும் இங்கிலாந்து அணி துவம்சம் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் எங்கள் தெருவில் இருக்கும் வெங்கிட்டு தாத்தா வாக்கிங் ஸ்டிக்கால் சிக்ஸர் அடிப்பார். அவ்வளவு மோசம், கடந்த இரண்டு இன்னிங்ஸில் ஆறு விக்கெட் மட்டுமே எடுத்து கிட்டத்தட்ட 1150 ரன்கள் கொடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வார்னே மீண்டும் வரலாம் என்று பேச்சு எழுந்த்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் டான் பிராட்மேன் கல்லறையிலிருந்து எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், ரிக்கி பாண்டிங் ஒரு மொக்க கேப்டன், அவர் டீமில் இருந்த ஆட்கள் அவரை இவ்வளவு நாள் காப்பற்றி வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. என்னதான் இன்னும் மூணு மேட்ச் இருக்குன்னாலும், ஆஸ்திரேலியா இதிலிருந்து வெளியே வருவது கஷ்டம்தான். தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயார் பண்ண சொல்லி அதில் செம்ம அடி வாங்கும் ஆஸ்திரேலிய அணியைப் பார்த்தா ஒரு வரி சொல்ல வேண்டும்... ‘வாட் அ பிட்டி...’

இன்னொரு மிக முக்கியமான சம்பவம். அமைதிக்கான நோபல் பரிசை இந்த முறை சீனாவைச் சேர்ந்த லியூ ஃசியாவ்போ என்பவர் பெற்றுள்ளார். அவர் ஜனநாயகத்திற்கு சாதகமாக எழுதிய கவிதையால் அவரை சிறை வைத்தது கம்யூனிச சீனா. அவருக்கு பரிசளித்ததையும் கண்டித்தது. அத்தோடு நில்லாமல், ஏதோ எனக்கு உடம்பு சரியில்ல அதனால பள்ளிக்கு லீவ் விடுங்க என்பது மாதிரி. யாரும் அந்த பரிசளிப்பு விழாவிற்க்கு செல்லக்கூடாது என்று சத்தம் போட்டு கத்தியது. இதனால் பாகிஸ்தான், வியட்னாம் போன்ற நாடுகள் செல்வதில்லையென முடிவெடுத்தது. இந்தியா என்ன செய்யும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரையில் முதுகெலும்பு இல்லாமல் இருந்த இந்தியா முதல்முறையாக நிமிர்ந்து நின்று கண்டிப்பாக செல்வோம் என்று சொல்லியுள்ளது. குட்ட குட்ட குனிவார்கள் என்று எதிர்பார்த்த சீனாவிற்கு இது செம்ம அடி. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்கயாவது சீனா நமக்கு செம்ம அடி கொடுக்க போகுது... :)

நம்ம ரெண்டு அடியையும் பார்த்தச்சு, இன்னையோட பரிட்சை முடிஞ்சது வாத்தியார் செம்ம அடி கொடுக்கக் கூடாது... பார்ப்போம்...


Monday, December 06, 2010

சுடச்சுட பாடல்

இந்த காலத்துல நம்பி நல்ல பாட்டுன்னு ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல. நேற்று ‘வ குவாட்டர் கட்டிங்’ படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ’தேடியே..’ பாடல் நல்ல இருக்கேன்னு யூட்யூபில் தேடினேன். அப்போதான் தெரிஞ்சது அது சுட்ட பாடலென்று... அப்புறம்தான் இசையமைப்பாளர் யாருன்னு பார்த்தா நம்ம GV... அதாங்க தேவா இல்லாத குறைய தீத்து வைக்க வந்திருக்கும் வரப்பிரசாதம். சும்மா மரண காப்பி... இங்க கேளுங்க...


யூட்யூப் அது இதுன்னு இன்னிக்கு எப்படியோ மக்கள் கண்டுபுடிக்கறது தெரிஞ்சும் நம்ம GV சுட்றார்ன்னா.. அவர் தன்னம்பிக்கையை பாராட்டியேயாக வேண்டும். எதோ அந்த காலத்தில் தேவா மைக்கல் ஜாக்சனிடமிருந்து கொஞ்சம் ஆறிப்போன டீ, ஊசிப்போன வடை அந்த மாதிரி சுடுவார் மக்களுக்கும் தெரியாது, ஆனா நம்ம புள்ள சுடச்சுட போட்ற பணியாரத்த ஆட்டைய போட்றார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துல ’உன் மேல ஆசதான்...’ பாட்டு சர்வம் படத்தின் ‘அடடாவா அடிக்கலாம்..’ மாதிரி இருந்தது. இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் சரி ஆயிரத்தில் ஒருவனிலும் சரி ’பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ பின்னணி சரமாரியாக தெரிந்தது. இது எல்லாம் தெரிந்தும் அவருக்கு எதுக்கு சான்ஸ். சினி ஃபீல்டில் இருக்கும் கேபிள் சார் மாதிரி ஆட்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
இதே போல யுவனும் வாமனன் படத்தில் ‘ஒரு தேவதை..’ பாடலை ஆஜா நச்லே படத்தில் வரும் ‘ஒரே பியா..’ என்னும் பாடலை தழுவி இசையமைத்திருப்பார். அதுவும் ஒரு சுடல்தான்.இதை இங்கே கேளுங்கள்.

எனக்கு தெரிஞ்சு நியாயமான இரண்டு இசையமைப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் DSP - அவர்களது இசையை மட்டுமே காப்பியடிப்பார்கள். எப்போதும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஒரே மாதிரிதான் இருக்கும்.

இப்படி ஆளளுக்கு சுட்டு சுட்டு பாட்டு போட்டா ஒரு மனுஷன் நம்பிக்கையோட ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல... இதுக்கு என்ன பண்ணலாம்.

டிஸ்கி: ’ஓரே பியா..’ பாடிய ராஹத் ஃபதே அலி கான், நுஸ்ரத் ஃபதே அலி கானின் சகோதரரின் மகன். முடிந்தால் அவரது அனைத்து படப்பாடல்கள் மற்றும் கவாலி பாடல்களை கேட்டுப் பாருங்கள்.


Thursday, November 25, 2010

கலாச்சாரம் எங்கே இருக்கிறது?

சுற்றிலும் இரைந்து கிடந்த துணிகளும், சுருட்டி வைக்காத படுக்கையும், காப்பிக் கரை படிந்த கார்பெட்டும், டேபிளின் மேலிருந்த சிப்ஸ் பாக்கெட்டும் கீழே சிந்தியிருக்கும் இரண்டு சிப்ஸும் அமெரிக்க வாழ் இந்திய பேசிலர்ஸ் அறை என்பதை தெளிவாக காட்டிக்கொண்டிருந்தது.


சனிக்கிழமை காலை - 11:00

வெள்ளி மாலை முழுவதும் அந்த வார அலுப்பு தீர ஆட்டம் போட்டு விட்டு வந்து படுத்ததால் பனிரெண்டு மணிக்கு குறைந்து எழுந்தால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்பது போல மெய் மறந்து தூங்கும் கூட்டம் இவர்கள். சந்தோஷ் எப்போதும் இல்லாமல் இன்று சற்று முன்னமே எழந்து, குளித்து ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்தான். முகுந்த் தூக்கம் கலைந்தும் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல், புரண்டு படுத்தான்.

‘என்னடா சீக்கரமா எழுந்துட்ட?’ சந்தோஷிடம் முகுந்த்.
‘மித்ராவ மீட் பண்ண போறேன்’ - மித்ரா அவனுடய கேர்ள் ஃபிரெண்ட்.
‘டேய், மதியானதுக்கு மட்டர் பனீர் பண்றேன்னு சொன்ன?’ - அவனவன் விஷயம் அவனுக்கு.
‘இல்ல நாளைக்கு பார்க்கலாம்’
’அப்போ இன்னிக்கும் டகோ பெல் சோறா...ரைட்டு....என்னடா டெபுல டக் அவுட்டான பேட்ஸ்மன் மாதிரி இருக்க, ஏதாவது பிரச்சனையா? எனி டிஸ்பூட்?’ - காலையில் எழுந்தவுடன் மொக்கை போட ஆரமித்தான் முகுந்த்.
‘...’
‘சரி காஃபி ரெடி பண்றா நான் போய் பல்லு வெலக்கிட்டு வரேன்’
‘டேய் நான் உன்கூட பேசணும்’ - சந்தோஷ் வாய் திறந்தான்.
‘என்ன காதல் பிரச்சனையா... பேசிலர்ஸ் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா... சரி இரு வரேன்..’ என்று பாத்ரூமினுள் சென்று கதவை தாளிட்டான்.

மன்மத லீலையில் ஆரமித்து கிளிமஞ்சாரோ வரை அவன் பாடி வெளியே வர பத்து நிமிடங்கள் பிடித்தது.

‘டேய்.. நீ இன்னும் காப்பி ரெடி பண்ணலயா... லவ் பண்ணுங்கடா நண்பனுக்கு காப்பி போட்டுட்டே லவ் பண்ணுங்க... ’
‘என்ன பிரச்சனை?’ சந்தோஷிடம் அமர்ந்தான்
’நீ நேத்து குணாகிட்ட அப்படி பேசிருக்க கூடாது....’ சந்தோஷ் அவன் கண்களைப் பார்த்து சொன்னான்

வெள்ளிக்கிழமை- இரவு 9:30
இடம் : எமினெம் பப்

சந்தோஷும், முகுந்தும் வேலை முடிந்து வெள்ளைக்காரிகளை சைட் அடிக்க தெரிவு செய்திருந்த்த தோதான இடம். சந்தோஷ் அவ்வப்போது பீர் மற்றும் சில பல விஸ்கி கலந்து அடிப்பவன். முகுந்த் பப் சென்று பச்சைத் தண்ணீர் சாப்பிடும் ஜாதி. இவர்களது நண்பன் குணா அங்கு ஒரு பெண்ணுடன் வர....

‘டேய் மச்சான்... எப்படிடா இருக்க..’ சந்தோஷ் விசாரிக்க..
‘சூப்பர் டா... ஒரு நிமிஷம் டா வந்துறேன்’ என்று கூறி குணா கவுண்டர் நோக்கி சென்று.. தனக்கு ஒரு பீரும், தன்னுடன் வந்த பெண்ணிற்க்கு ஒரு பீரும் வாங்கி வந்தான்.
‘என்னடா சரக்கு வாங்கி ஃபிகர் கரெக்ட் பண்றயா... மச்சம் டா’ முகுந்த் கள்ள சிரிப்புடன் கேட்க
‘டேய்.. இது என் சிஸ்டர் டா... இங்க படிக்க வந்துருக்கா’ என்று குணா கூற. முகுந்த் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு
‘என்னடா தங்கச்சிக்கு பீர் வாங்கித்தர... பூ வாங்கித்தர அண்ணன் பார்த்துருக்கேன், பீர் வாங்கித்தர அண்ணன் நீதாண்டா... கலாச்சாரம் வளருது....’
‘டேய்.. அவ இந்த காலத்து பொண்ணுடா... அதுவும் அமெரிக்கால படிக்கறா... இதெல்லாம் இருக்கறதுதான் மச்சி...’ சந்தோஷ் குணாவிற்க்கு சப்போர்ட் செய்தான். குணா அந்த பக்கம் திரும்பி இருந்ததால் முகுந்த் சந்தோஷிடம் ரகசியமாக சொல்கிறேன் என்று நினைத்து கொஞ்சம் சத்தம் போட்டே ‘என்னடா நீயும் இப்படி பேசர...இன்னிக்கு பீர் வாங்கித்தருவான்... நாளைக்கு வேற எங்கயாவது அனுப்புவான்...’ இதை காதில் வாங்கிய குணா...
‘டேய்.. நீ ஓவரா பேசர.. திஸ் இஸ் த லிமிட்.. ‘ என்று கூறி தனது தங்கையை கூட்டிக்கொண்டு வேறு பக்கம் சென்றான். சந்தோஷ் முகுந்தை முறைத்தான், முகுந்த் தான் கேட்டதில் தப்பேதும் இல்லை என்பது போல் கையசைத்தான்.
முகுந்தும் சந்தோஷும் அதன் பிறகு பேசிக்கொள்ளவே இல்லை. முகுந்தும் காலையில் எல்லாம் சரியாயிடும் என்று விட்டுவிட்டான். வீட்டிற்க்கு வந்து படுத்தவர்கள் விரைவில் தூங்கினர்.

இன்று.....

‘ஓ.. அதுதான் உன் பிரச்சனையா?... நான் கேட்டதுல என்ன தப்பு, உனக்கும் ஒரு தங்கை இருக்கா அவளுக்கு நீ பீர் வாங்கி குடுப்பயா?’ - முகுந்த் தன் கேள்வியை வைத்தான்.
‘டேய் இது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம் டா. நான் பண்ணமாட்டேங்கறதுக்காக யாருமே பண்ணக்கூடாதுன்னு நெனைக்கறது தப்பு..’ - சந்தோஷ்.
’என் ப்ரெண்ட் தங்கை எனக்கும் தங்கை... நான் உரிமை எடுத்துக்கறது தப்பா? அதுவுமில்லாம நம்ம கலாச்சாரம், பண்பாடுன்னு இருக்கில்ல, இவனுங்களுக்குதான் அதெல்லாம் இல்ல’
‘அப்படி நீ நெனச்சுருந்த்தா தன்மையா சொல்லிருக்கலாம், நீ சொன்ன விதம் தப்பு. வென் யூ ஆர் இன் ரோம் பீ ய ரோமன் அப்படின்னு சொல்லிருக்காங்க அதுப்படி அவ நடத்துருக்கலாம் இல்ல’ -சந்தோஷ்
‘உடனே இத சொல்லிருங்க... இத நல்ல விஷயத்துக்கு யூஸ் பண்ணாதீங்க. வெள்ளக்காரன் காலைல்ல 7 மணிக்கு வேல செய்ய ஆரமிச்சா 4 மணி வரைக்கும் வேல மட்டும்தான் செய்வான். நம்ம ஆளுங்க வேல ஆரமிக்கரதே 11 மணிக்கு அதுக்குள்ள காப்பி, சாப்பாடு எல்லாம். அவன் வேல முடிக்கும் போதுதான் நம்ம வேல ஆரமிக்கரதே. இதுக்கெல்லாம் ரோமனா மாறாதீங்க..’
’சரி..ஒத்துக்கறேன்..பட் கலாச்சாரம்ன்ன என்ன?’
‘மாரல் அண்ட் எதிகல் வேல்யூஸ் ஆஃப் த சொஸைட்டி...’
‘வேல்யூஸ் எங்க இருக்கு, நீ கமல் வீடியோ பார்த்த இல்ல. அவர் என்ன சொன்னார் கலாச்சாரம்ங்கற்து காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிட்டு வருதுன்னு சொல்லல’
‘பொதுவா சொன்னத இதோட முடிச்சு போடாத.. பெண்களை நம்பி நாடே இருக்குடா, வருங்கால இந்தியாவே அவங்கள நம்பிதான் இருக்கு. வீட்ல குழந்தைங்க முன்னாடி தண்ணி அடிச்சா என்ன ஆகும்’ - முகுந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
’அவங்கள பாத்துக்க அவங்களுக்கு தெரியும்டா...’
‘இதுதாண்டா நாம பண்ற தப்பு, ஆம்பளைங்க தண்ணி அடிக்க ஆரமிக்கும்போது இப்படிதான் விட்டாங்க, இப்போ அது டாஸ்மாக் விருட்சமா வளர்ந்த்துருக்கு. எத்தனை குடும்பங்களோட ஒரு நாள் சோறுக்கு தேவையான காசு டாஸ்மாக்க்கு போகுதுன்னு தெரியுமா? இத இப்படியே விடக் கூடாதுடா, முளையிலே கிள்ளி எறியணும், இருக்கற கலாசாரமாவது மிஞ்சும்’
‘கலாசாரம்.. கலாசாரம்ன்னு நீ சொல்றது சிரிப்புதாண்டா வருது. எங்கடா இருக்கு கலாசாரம். அம்மா, அப்பாவ கவனிச்சுக்கறது நம்ம கலாசாரம், அப்போ ஏன் இத்தனை முதியோர் இல்லம். தமிழ் கத்துகறது நம்ம கலாசாரம், ஆனா இன்னிக்கு தமிழ் தெரிலைன்ன பெருமைப் பட்டுக்கறோம். ஒருத்தனுக்கு ஒருத்திங்கறது நம்ம கலாசாரம், அப்புறம் ஏன் நாம எய்ட்ஸ்ல முன்னாடி நிக்கறோம். ஏதாவது ஒரு கலை கத்துக்கறது நம்ம கலாசாரம், நமக்கு சினிமா பாட்ட விட்ட எதும் தெரியாது. நீகூடதான் அந்த பொண்ண பாத்த உடனே ஃபிகர் அப்படி இப்படின்னு பேசின அது கூடதான் கலாச்சாரம் இல்ல... இப்படி அடுக்கிட்டே போகலாம். இப்போ சொல்லு எங்க இருக்கு நம்ம கலாசாரம்.’ - சந்தோஷ் தெளிவாக பேசினான்.
‘அதெல்லாம், நாமதான் மாத்தணும்.’ - முகுந்த்
‘அப்போ இங்க உக்காந்து என்ன பண்ற... இந்திய கலாசாரம்ன்னு ஒன்னு இருந்தது, அத யாரும் இப்போ ஃபாலோ பண்றதில்லங்கறதுதான் உண்மை.... சரி நான் கிளம்பறேன்... நல்லா யோசிச்சுப் பாரு...’ என்று கூறி சந்தோஷ் வெளியே சென்று கதவை சாத்தினான்.
முகுந்த் சிறிது நேரம் வெறித்து விட்டு இந்திய கலாசரத்தை தெரிந்து கொள்ள இணையதளத்தை தட்டினான். இந்திய கலாசாரம் ஃபேஸ்புக்கில் இருந்தது, அதை 2560 மக்கள் ஃபாலோ செய்துகொண்டிருந்தனர்....


Wednesday, November 24, 2010

என் இனிய தமிழ் மக்களே....

உங்கள் பாசத்திற்க்குறிய ஜிகர்தண்டா பேசுவது... என்னடா வலையுலக சிட்டுக்குருவி காணாமப்போச்சே என்று வருத்தப்பட்டவர்களையும், சீறிவந்த சிங்கம் செத்துப்போச்சே என்று சந்தோஷப் பட்டவர்களுக்கும் ஒரு விஷயம்... ஜில் ஜில் ஜிகர்தண்டா இங்க குளிர் தாங்க முடியாமல், தமிழக மக்களை மகிழ்விக்க இந்தியா வருகிறார்...


மன்மதன் அம்பு மற்றும் இன்ன பிற படங்கள் அண்ணனின் வருகையையொட்டி வெளிவருவதால் பயங்கர பிஸி.... பூ மிதிப்பது, திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுப்பது, பிள்ளைங்களுக்கு பெயர் வைப்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

சிங்கார சேலத்தில் இருப்பதால், சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதாவது நடந்தால் தெரிவிக்கவும்... அடிக்கடி எழுததான் முடில (இனிமேல் அப்படி இல்ல) ... எழுதறவங்கள பார்ப்போம்...

தேதி : டிசம்பர் 14 - ஜனவரி 19

இனிமேல் மஜாதான்....


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online