சுற்றிலும் இரைந்து கிடந்த துணிகளும், சுருட்டி வைக்காத படுக்கையும், காப்பிக் கரை படிந்த கார்பெட்டும், டேபிளின் மேலிருந்த சிப்ஸ் பாக்கெட்டும் கீழே சிந்தியிருக்கும் இரண்டு சிப்ஸும் அமெரிக்க வாழ் இந்திய பேசிலர்ஸ் அறை என்பதை தெளிவாக காட்டிக்கொண்டிருந்தது.
Thursday, November 25, 2010
கலாச்சாரம் எங்கே இருக்கிறது?
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 12:12 PM 2 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: ஆதங்கம், சிறுகதை முயற்சி
Saturday, August 07, 2010
ரெட் பேனாவும் சமுதாய மாறுதலும்
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 8:39 PM 1 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: ஆதங்கம், சிறுகதை முயற்சி, சீரியஸ்
Wednesday, May 19, 2010
நேற்று பெய்த மழையில்...
இந்த கதையை சென்னையை ஆட்டுவிக்கும் லைலா புயலுக்கு சமர்பிக்கிறேன்.
நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையில், இன்று ஈரச்சேலை அணிந்திருந்தாள் சாலைப்பெண். மழை நீரை குடித்து பள்ளங்கள் தங்களது வயிற்றை நிரப்பி காட்சியளித்தன.
"யூஸ்லெஸ் ஃபெல்லோ" என்று சத்தமாக கத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக நடந்துகொண்டிருந்தார் திருவாளர் காளிதாஸ். தாஸ் அண்ட் கோ முதலாளி. சாதாரணமாக இருந்த தொழிலை இன்று பல நாடுகளுக்கு கொண்டு சென்றவர். வேலை விஷயத்தில் பயங்கர கறார் பேர்வழி.சொன்ன நேரத்தில் சொன்ன வேலை முடியவில்லை என்றால் மனிதன் ஆகாசத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிடுவார். சில நேரங்களில் இவர் மனிதாபிமானமற்றவர் என்று மற்றவர் சொல்லும் அளவிற்கு நடப்பார். இவ்வளவு கோவக்காரறாய் இருந்தாலும், தனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால், அனைவரையும் தனது பிள்ளையை போல பார்த்துக்கொள்வார்.
'எல்லாருக்கும் பொறுப்பு இருக்கணும்ன்னு நெனைக்கறது தப்பா?' என்று கேட்பார்.
'அதுக்குன்னு அவங்களுக்கு வேற முக்கியமான வேல இருக்கலாம் இல்லீங்களா?' என்றால்.
'அவனுக்கு என்ன குடி முழுகி போற வேல, இங்க வராம?' என்று அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார்.
'சரோஜா, இந்தா ஐயாவுக்கு காப்பி கொண்டு போ... ஆறிட போகுது' காளிதாஸ் மனைவி செண்பகம் வேலைக்காரியிடம் காபியை நீட்டினாள்.
'அம்மா, ஆறினாலும் ஐயா சூடா இருகாரு... ' என்று சரோஜா காமெடி பண்ண... செண்பகம் முறைத்தாள், மனதிற்குள் சிரித்தபடி.
காபியை சரோஜா நீட்ட, 'இது ஒண்ணுதான் கொறச்சல், கொண்டு போய் கீழ கொட்டு' என்று எரிந்து விழுந்தார்.
'அம்மா, மூஞ்சி செவந்துருக்கான்னு பாருங்க... '
'ஏண்டி...'
'ஐயா நெருப்ப மூஞ்சில துப்பிடாறு, என்னத்துக்கு ஐயா இம்புட்டு சூடா இருக்காரு'
'கணேசன் இன்னும் வரல இல்ல அதான்'
கணேசன், அவரது டிரைவர். காலை எட்டு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். இன்னும் ஆளக்காணோம். மணி ஒன்பது.
'நேத்து பேய் மழை பெஞ்சதுல, எதுனாச்சும் பிரச்சனையா இருக்கும்'
'உனக்கு அவர பத்தி தெரியாதா, அதெல்லாம் அவரு பொருட்டே பண்ண மாட்டாரு. நேத்துக்கூட அவர் பியோன் உடம்பு சரியில்லன்னு லடே-ஆ வந்தானாம், அவன பத்துநாள் சஸ்பென்ட் பண்ணிட்டார்'
'அம்மா என்னதான் இருந்தாலும்......' சரோஜா இழுக்க
'என்னடி...' செண்பகம் அதட்டினாள்
'ஒண்ணுமில்லைம்மா...' என்று சொல்ல வந்ததை மென்று முழுங்கிவிட்டாள்.
'என்னங்க, அவனுக்கு போன் பண்ணி பார்க்க வேண்டியதுதான?' என்று அம்மா கேட்க
'போன் பண்ணி பாத்தாச்சு, கன்ட்ரி ஃப்ருட், என்ன பண்றானோ, இன்னிக்கு அவன் சீட்ட கிழிக்கணும்'
'அம்மா, ஐயா இப்போதான காபி குடிச்சாறு, இப்போ ஏதோ ஃப்ருட் ஜூஸ் கேக்கறாரா?'
'நீ உன் வேலைய பாரேன், யாரு என்ன பேசறாங்கன்னு கேகரதுல நேரத்த செலவழி'
அங்கும் இங்கும் நடந்த தாஸ், சோபாவில் அமர்ந்து டிவி-யை தட்டினார். சன் நியூஸ் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.
'நேற்று பெய்த அடைமழையால், சென்னை வேளச்சேரி பகுதியில் அனைத்து வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.' இங்கு இருக்கும் மக்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாப்போம். கேமேராவை திருப்பினால், கணேசன் வெள்ளை சட்டை மாட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.
'சார், நகருங்க சார். வேலைக்கு ஏற்கனவே நேரம் ஆச்சு. முதலாளி காத்துட்டு இருப்பார்'
'என்ன சார், உங்க வீடு தண்ணீல இருக்கு. வேலைக்கு போறேன்னு கெளம்புறீங்க'
'சார், நான் இருந்தாலும் தண்ணி லெவல் கொறஞ்சதும்தான் ஏதும் பண்ண முடியும். என் பொண்டாட்டி தண்ணி அள்ளி வெளிய ஊத்தினப்புறம் வந்து பாத்துக்கலாம்'
'இதோ இந்த தொழிலாளி, குடியே முழுகினாலும் வேலைக்கு செல்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது முதலாளி கொடுத்துவைத்தவர்'
இதை கேட்ட காளிதாஸ் அவரின் கண்ணில் நீர் வந்தது. நேற்று பெய்த மழையில், இன்று இவர் மனதில் ஈரம்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 7:25 PM 2 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: ஆதங்கம், சிறுகதை முயற்சி
Tuesday, January 05, 2010
வெளியுலகம்-2
கிழக்கே வானம் வெளுக்க ஆரமித்திருந்தது. எப்போது கந்தசாமி அண்ணன் வருவார் என்று காத்திருந்தேன். இரவு முழுவதும் தூங்கினால்தானே விழிப்பதற்கு.
மணி ஆறரை இருக்கும். கந்தசாமி அண்ணன் வந்து கதவைத் தட்டி திறந்துவிட்டார். கண்களில் நீர் துளிர்த்து இருந்தது. 'தம்பி.. வாப்பா..போகலாம்..' என்றார். வெளியே வருகையில் அவரிடம் சொன்னேன். 'அண்ணே... நம்ம சகாக்கள்கிட்ட சொல்லிட்டு வரேன்' என்று கூறி அவரது ஒப்புதலுக்கு காத்திருந்தேன். தலையசைப்பிற்க்கு பின், எனது இரண்டு அறைக்கு அடுத்து இருந்த மார்த்தாண்டன் அறைக்குச் சென்றேன்.
'மார்த்தாண்டம் அண்ணே, ராஜேஷ் வந்துருக்கேன்...இன்னிக்கு எனக்கு ரிலீஸ்... வரேண்ணே'
கண்ணில் கண்ணீர் பெருக, கட்டியணைத்து 'குரு... போறேன்னு சொல்லுங்க குரு..நீங்க எங்கயோ இருக்க வேண்டியவன்..இந்த பாழாப்போன இடத்துக்கு வராத குரு' என்றார். எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
சுப்ரமணி, 'குரு.. போ குரு.. இந்த வெளியுலகம் உனக்காக காத்திருக்கு.. நானும் வரேன்.. எங்க இருக்கேன்னு மட்டும் சொல்லு குரு' என்றான் நட்புடன்.
மனோஜ், அறைக்குளிருந்தவாறே, கண்ணீரை அடக்க முடியாமல், 'நீ அப்படியே போயிடு குரு. என்னப்பாக்காத!!!' தூக்குதண்டனைக் கைதி. என்னை எப்போது மறுபடியும் பார்ப்பான். தெரியவில்லை.
வெளியே இருந்து உள்ளே வருகையில் எனக்கு யாருமில்லை, இப்போது நான்கு ஜீவன்கள் எனக்காக இருக்கின்றன, அழுகின்றன. வாழ்கையில் நானும் வெற்றிபெற்றுள்ளேன்.
கந்தசாமி அண்ணன் கையெழுத்து போடசொன்ன இடங்களில் கையெழுத்தைப் போட்டேன்.
'தம்பி, இத நீ போன வருஷமே பண்ணிருக்கணும். நெறைய முயற்சி பண்ணுனேன். குண்டுவெச்சவனுக்கு ரிலீஸ் குடுத்தானுங்க, உனக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிடாங்க. எப்படியோ இப் நடந்துச்சே. சந்தோஷம். '
'பரவால்ல அண்ணே'
'போ தம்பி, வீட்டுக்கு வா அடிக்கடி. இந்த நம்ம அட்ரஸ். எப்பனாலும் வா' பாசத்துடன் அவர் கூறியது, என்னையறியாமல் கண்ணீரை வெளியேற்றியது.
வெளியே காலெடுத்து வைத்தேன் புது லட்சியத்துடன், யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இதுவரையில் வராதவர்களா, இப்போது வந்திருப்பார்கள். எவரும் இல்லை. உள்ளே வேலைப் பார்த்ததில் கொடுத்த நான்காயிரம் ரூபாய் எனது பாக்கெட்டில் இருந்தது. எங்கே செல்லலாம், என்னதான் கோவம் இருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இப்போது இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வார்கள், என்று கந்தசாமி அண்ணன் சொன்னது எனக்கு நம்பிக்கையளித்தது.
வண்டியேறினேன் ஊருக்கு, சிறைக் காலங்களை அசைபோட்டபடி பயணித்தேன். முன்னிரவு தூங்காத காரணத்தால், தூங்கியும் போனேன்.
என் பேருந்து நிறுத்தம், என் தெரு, என் வீடு. சென்று கதவைத் தட்டினேன், ஒரு குல்லா போட்ட சேட்டு வந்தார்.
'நிம்பிள்க்கி.. யார் வேணும்...'
'நம்பிள்க்கி தெரியாது... நம்பிள் இப்போதான் வந்தாங்கோ' என்று கூறி கதவை சாத்தினார்.
பக்கத்து வீடு கோமளம் ஆன்ட்டி, தாடியுடன் இருந்தாலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். 'அவங்க மூணு வருஷம் முன்னாடியே மாத்தலாகிப் போயிட்டாங்களே. எங்க போனாங்கன்னு தெரியாது' என்று முன்னாட்களில் வாங்கிய காப்பி பொடிக்கும், சக்கரைக்கும் விசுவாசமாய் இருந்தார். இதேதான் எதிர் வீட்டு ஆன்ட்டியும் அதே கதைதான். முக்குக் கடை பாய் கூட தெரியாது என்று சொன்னது எனக்கு ஆச்சிர்யமாய் இருந்தது. மிட்டாய், பப்பிள் கம் மற்றும் ஊர்க் கதை என பல விஷயங்களை பகிர்ந்த எனது நண்பர் ஆச்சே அவர். சிறைக்கு சென்ற நேரத்தில், எனக்கு எதிர்ப்பார்ப்புகள் இல்லை. அனுபவம் புதியதாய் இருந்தது. இங்கு எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு ஏமாற்றம் கசந்தது.
திலக், அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று கூட தெரியாது. முயற்சி செய்து பாப்போம், என்னைப் பற்றி அவனுக்கு தெரியுமே. கல்லூரிக்கு சென்றால் அவனது முகவரியை கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் எனது பைகளை எடுத்துக்கொண்டு, சென்னை நோக்கி பயணமானேன். கல்லூரி, முற்றிலும் புதிய தோற்றம். எல்லாமே மாறி இருந்தது. ஆபிஸ் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் முன்பு நாக்கு வறண்டதால், டீ குடிக்க கண்டேன் சென்றேன். அவளை நான் சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
'நீங்க ஊர்வசிதான?'
'ராஜேஷ்'-திருத்தினேன்
'ஓ.. சாரி.. ரொம்ப நாள் ஆச்சில்ல அதான்'
'பரவால்ல.. இருக்கடும்ங்க. எப்படி இருக்கீங்க?'
'நான் நல்ல இருக்கேன்... நீங்க?'
'நான் இப்போதாங்க வந்தேன். உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். திலக் எங்க இருக்கானு தெரியுமா?'
'அவன் அமெரிக்கா-ல அவங்க பிசினஸ் பாத்துட்டு இருக்கான்...'
'அப்போ நீங்க?'
'நன்றிங்க, நான் வரேன்'
'ஏதோ கேக்க வந்தீங்க. காபி, டீ ஏதாவது சாப்பிட்டு போறீங்களா?'
'இல்லேங்க வேண்டாம்.'-என்று கூறி நகர்ந்தேன்.
சொந்தம், விட்டுச் சென்றது. நட்பு, பறந்து சென்றது. இனி என்னை நானே நம்பவேண்டியதுதான். படிப்பு இருக்கிறது என் கையில், யாரை நம்பவேண்டும் நான். ஏதாவது பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஜெய் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். விண்ணப்பித்தேன், அழைப்பும் வந்தது.
'வாங்க ராஜேஷ், உக்காருங்க'
'நன்றி சார்'
'நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கீங்க, உங்களுக்கு அனுபவம் இருக்கா? நீங்க எங்க படிச்சீங்க?'
'அனுபவம் இல்ல சார். நான் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல படிச்சேன்'
'ஓ.. பணக்கஷ்டமா?'
'இல்ல சார்... நான் ஜெயில்ல இருந்து படிச்சேன்'
அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்த அவர், தனது பேச்சை மாற்றினார். 'சாரி ராஜேஷ், இப்போ அறிவியல் ஆசிரியர்களுக்கு தேவை இல்லை. நீங்கள் அடுத்த முறை முயற்சியுங்கள்' என்று எனது ஃபைலை மூடினார்.
என்ன செய்ததால் இந்த உலகம் என்னை ஏற்றுக்கொள்ளும். செய்யாத தவறுக்கு, சிறையில் இருந்தேன். என்னால் முடிந்தவரை நல்லவனாய் இருந்தேன். என்ன தவறு செய்தேன். சிறையிலிருந்த எனது சகாக்கள் அளவுகூட வெளியுலகத்தில் அன்பு இல்லையா. நான் இப்போதுதான் சிறையில் இருப்பதாய் உணர்கிறேன். என்ன செய்ய இப்போது. மீண்டும் வெளியே முயற்சி செய்யலாம், ஆனால், இந்த பாழாய்ப் போன வெளியுலகத்தில் வாழ எனக்குப் பிடிக்கவில்லையே. எல்லாரும் எல்லாரிடமும், எதையாவது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனரே. கந்தசாமி அண்ணனிடம் சென்று சிறையில் எதவாது வேலை இருந்தால் கேட்போமே. 'ஒன்றே செய் அதுவும் நன்றே செய், அதுவும் இன்றே செய்', அண்ணனை தேடித் போனேன் அவர் கொடுத்த விலாசத்திற்கு, அவர் அங்கு இல்லை. கண்டிப்பாக அவர் சிறையில்தான் இருப்பார். சென்று பார்த்துவிடுவோம்.
வெளியிலிருந்த காவலாளியிடம், 'அண்ணே, கந்தசாமி அண்ணனே பாக்கணும்.'
'பர்மிஷன் இல்லாம பாக்கமுடியாதுப்பா'
'அண்ணே, கொஞ்சம் அவசரம். வேல விஷயமா பாக்கணும். யார்க்கிட்ட பர்மிஷன் வாங்கணும்'
'அட அதுக்கெல்லாம் பெரிய எடத்துக்கு போகணும்ப்பா. இடத்த காலி பண்ணு'
'கொஞ்ச நேரம்ன்னே. அந்த பர்மிஷன் வாங்க இப்போ டைம் இல்லன்ன. கொஞ்சம் தயை பண்ணுங்க' - கெஞ்சினேன்
'டேய், உனக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாது. சோறுதான திங்கற?'-போலிஸ் போலவே எகிற ஆரமித்தார்.
'அவர இப்போ எப்படி பாக்கனும்னு எனக்கு தெரியும்'
'டேய், என்ன ரொம்ப தொகுருற, அடிபட்டு சாகாத நாயே. எப்படி பாக்கரன்னு நானும் பாக்கறேன்.'
போலிசும் என்னை மதிப்பதில்லை.
ஐந்து நிமிடம் கழித்து.....
இரண்டு போலிஸ்காரர்கள் என்னை இழுத்துக்கொண்டு சென்றனர். திரும்பிப் பார்த்தேன், அந்த காவலாளி மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார், ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
அதோ, கந்தசாமி அண்ணன்....
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 5:23 PM 7 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி, தொடர்
Monday, January 04, 2010
வெளியுலகம்-1
விட்டதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
'டிங்...டிங்...டிங்.. ராஜேஷ் தம்பி..சாப்பிட வாப்பா..இங்க நீ சாப்பிட போற கடைசி மதியசோறு.. உனக்கு நினைவிருக்கில்ல நாளைக்கு உனக்கு ரிலீஸ் தம்பி..' அவர் சொல்லிச்சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், இருந்தாலும் அவரது வருத்தம் தரித்த வரிகள் இவன் காதில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவனது துன்பத்தில் கை கொடுத்த ஒரே ஜீவன் ஜைளீர் கந்தசாமி அண்ணன்தான். புத்தகங்கள், படிக்க உதவியது என்று சிறையில் இவர்தான் அவனதுதந்தை.
ஊர்வசி, எங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு தேவதை. பதிவேட்டில் அடுத்தடுத்த பெயராய் இருப்பதால் திலக் பென்சில் பேனா என்று வாங்கி ஓரிரு மாதத்தில் அவளை மடக்கிவிட்டான். அதெப்படி இவனுங்களுக்கு மட்டும் அப்படி அமையுதோ. இது ஒருபுறமிருக்க, ஒரு அழகான பெண் ஜூனியராய் வந்துவிட்டால் இந்த சீனியர் பசங்க விடும் ஜொள்ளை சொல்லிமாளாது. அப்படி அவளைப்பார்த்து வெற்றியும் ஜொள்ளு விட்டான். இந்த விஷயம் தெரிந்த திலக் அவளிடம் வகுப்பறையில் பேசும்போதெல்லாம், வெற்றி வருகிறானா என்று பார்த்து சொல்லும் வேலை எனக்கு. இதை கேவலமாக பல நண்பர்கள் ஓட்டி தள்ளுவார்கள். 'ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால்... எனக்கொரு காதல் அமையாதா' என்று நம்பிக்கையுடன் அவனுக்கு உதவி செய்தேன். இவனிடமிருந்து அங்கு சிட் பாஸ் செய்வதும், அங்கிருந்து இங்கு பதில் வருவதுமாய் அவர்களது காதல், சாரி நட்பு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது.
இப்படி ஒருநாள் நான் வெளியே நின்று காவல் காக்கையிலே வந்தான் அந்த கருத்தமச்சான் வெற்றி.
'டேய்.. எங்கடா அந்த ****'
'அண்ணே... யாரு..'
'அதாண்டா உன் கூடயே சுத்துவானே...அந்த நாதாரி...' சத்தம் கேட்டு வெளிய வந்தான் திலக்.
'டேய்.. இன்னாடா அவ பின்னாடி சுத்துரியாமே... அவ உன் அண்ணிடா டோமரு...' என்று கத்தினான்.. கூட்டம் கூட ஆரமித்தது.
'நீங்க வீணா எங்க விஷயத்துல தலையிடுறீங்க..நல்லதில்ல' திலக் எதிர்த்து பேசினான்...
'என்னடா தல வாலுன்னு பேசற... பேண்ட்ட கழட்டுரா' என்றான்.. இப்போது கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன...
'கழட்டுரா நாயே'
'இங்க வேணாம் அண்ணே.. நைட் உங்க ரூம்க்கு நானே வந்து கழட்டுறேன். பொண்ணுங்கல்லாம் இருக்காங்க' திலக் கெஞ்சினான்.
'நைட் நீ என்னடா ரூம்க்கு வரது... அவளையே என் ரூம்க்கு வர வைப்பேன்டா.. இப்போ கழடுரா இல்ல என் ஆளுங்க உன் பேண்ட்ட அவுப்பங்க' என்றான் திமிராய்...
அப்பா அம்மா அங்கு வந்து சேர்ந்தனர். விஷயம் அறிந்ததும், அவர்களும் எனது கோவத்தை சாக்காய் வைத்து நான்தான் செய்திருப்பேன் என்று நம்பினார். அவர்கள் என்ன செய்வார்கள், சுற்றி இருக்கும் சாட்சியங்கள் எனக்கு எதிராய் அமைந்துவிட்டதே.
'ஏண்டா, எத்தன தடவ சொல்லிட்டு போனோம்...இப்படி பண்ணிடையே டா...' அம்மா கண்ணீருடன் கத்தினார்...
'அம்மா... இல்லம்மா...நான் இல்லம்மா'.. அவர்களது சத்தத்தில் எனது சத்தம் அமிழ்ந்துபோனது.
'இனிமேல் ஊர்க்காரங்க மூஞ்சில எப்படிடா முழிப்பேன், நம்ம குடும்ப மானத்த வாங்கிட்டயேடா.' அப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
'இனிமேல் என் மூஞ்சிலையே முழிக்காதடா... வாடி போகலாம்' அப்பா அம்மாவையும் கூடிச்சென்றார்.... வருவார்.. என்று நம்பினேன்... நம்புகிறேன் இன்றுவரை...
பிறகு வழக்கு கோர்ட் அங்கு இங்கு என்று சென்று எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வந்தது. எனக்கென அழுக ஒரு கண்கள் கூட இல்லை, என் கண்கள் கூட இல்லை.
சிறை, கொள்ளையர்கள், கொலைகாரர்கள் கூடாரம் என்று எண்ணிய நான், என்னைப்போலவும் சிலர் இங்கு இருப்பர்களோ என்று எண்ணத்தொடங்கிய இடம். வந்த ஒரு மூன்று மாதங்கள் யாருடனும் தொடர்பற்று இருந்தேன். சிலர் கந்தசாமி அண்ணன், உறவுகளற்ற எனக்கு ஒரு உறவை இருந்தவர், அவருடன் மட்டும்தான் நான் பேசுவேன். எனது கதையைக் கேட்ட அவர், ஏதாவது படிக்கிறயா என்று கேட்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் சேகுவேரா போன்றவர்களின் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். எனக்காக மேலிடத்தில் போராடி சென்னை பல்கலைகழகத்தின் அஞ்சல் வழி முறையில் இளங்கலை அறிவியல் பட்டம் படிக்க உதவினார். ஓரிரு மாதங்கள் கழித்து, என்னிடம் வந்த கந்தசாமி அண்ணன். 'தம்பி, இங்க இருக்கறவங்க எல்லாரும் தப்பானவங்க கிடையாது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவங்கள குத்தவாளியா ஆக்கிருச்சு. அவங்களுக்கும் படிக்கணும், தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கு. நீ ஏன் இவங்களுக்கு சும்மா தெரிஞ்சதை சொல்லித்தரக்கூடாது? உனக்கு எல்லா புத்தகங்களும் நான் வாங்கித்தரேன்' எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்த பெரியவரின் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.
எனது வகுப்பறை மாணவர்கள்,
மார்த்தாண்டம், தன் மனைவியை கொன்றுவிட்டு வந்தவர். எதனால் என்று நான் கேட்கவில்லை. ஆயுள்தண்டனை கைதி.
சுப்ரமணி, சின்ன சின்ன திருட்டுகள் செய்து வருபவன். வயிற்றுப் பிழைப்புக்காக.
மனோஜ், கூலி வேலை செய்து வந்தவன், தன் முதலாளியை அடித்துவிட்டு வந்திருந்தான்.
இவர்களுக்கு அ, ஆ முதல் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லித்தந்து வந்தேன். அவர்களும் என்னை செல்லமாக குரு என்று அழைப்பார்கள். மார்க்ஸ் மீது ஏற்ப்பட்ட பற்றினால் நானும் தாடி வளர்க்க ஆரமித்தேன். இங்கும் அரசியல் மற்றும் ரவுடித்தனம் செய்து வந்த சிலர் இருந்தனர். அவர்கள் இல்லாத பக்கமாய் பார்த்து கந்தசாமி அண்ணன் எங்களுக்கு தச்சு வேலை செய்யும் இடத்தில் வேலைப் போட்டுக் கொடுத்தார். கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டுவந்தேன். மூன்று வருடங்கள் ஓடின. வகுப்பில் மாணவர்கள் அவ்வப்போது கூடியும் குறைந்தும் இருந்தனர். நானும் நல்ல மதிப்பெண் எடுத்து இளங்கலை பட்டம் முடித்துவிட்டேன். மீண்டும் படிக்க இருந்த ஆர்வத்தால் முதுகலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது.
புத்தகங்கள், எனது உற்ற நண்பன். எனது அறை முழுவதும் புத்தகங்கள். வேலை நேரம், பாட நேரம் தவிர மீதிநேரம் புத்தகத்துடன் கழிந்தது. சுஜாதா, பாலகுமாரன், கர்ட் வன்னகேர்ட், அயன் ராண்ட், கப்ரியல் க்ராசியா மார்குவேஸ் போன்ற பல எழுத்தார்கள் என்னுடன் அந்த சிறை அறையில் வாழ்ந்தனர். நானும் சில கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத ஆரமித்தேன். இப்படியாக அடுத்த இரண்டு ஆண்டுகள் ஓடின. முதுகலையும் முடித்துவிட்டேன். வெளியே சென்றால் நல்ல வேலை கிடைக்குமென கந்தசாமி அண்ணன் நம்பிக்கை தெரிவித்தார். அப்படி சொல்லும்போதெல்லாம், அவரது கண்ணில் நீர் துளிர்க்கும். நான் அவரைவிட்டு செல்கிறேன் என்ற காரணத்தால்.
இந்த ஆறு வருடத்தில் என்னை பார்க்க யாருமே வரவில்லை, ஒரு வேளை நான் நன்கு படித்து பக்குவமடைந்தது தெரிந்திருக்காது. வெளியே சென்று சொல்லுவோம்வெல்லுவோம்.
நாளை நான் விடுதலை ஆகிறேன். யார் வருவார்கள் என்னை வரவேற்க? அப்பா அம்மாவிற்கு தெரியுமா எனக்கு விடுதலை என்று. இந்த நினைவுடன் கண்ணயர்கிறேன். நாளை பாப்போம்.
(தொடரும்)
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 9:58 AM 3 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி, தொடர்
Thursday, December 31, 2009
ஹேமாவின் கோமா...
எப்போதும் ஏதாவது படத்துக்கு கூட்டமாய் செல்வது எங்கள் பழக்கமா. அதுமாதிரி பீமா படத்துக்கு போலாமா என்று கேட்க ஹேமாவிற்கு போன் செய்யலாமா என்று யோசித்த போது ஷாமாவிடமிருந்து கால் வந்தது. ஹேமா கோமாவில் இருக்கிறாளாம். வேகமா வண்டி ஓட்டும் போட்டியாமா, அதில் அவள் ஸ்கிட் அடித்து விழுந்தாலாமா....
கோமாவில் இருக்கிறாள் ஹேமா என்று தெரிந்ததும், நாமாக சென்று பார்க்கவேண்டும் என்று புறப்பட்டோம். அங்கே சென்றதும், ட்ரிம்-ஆனா அவளது மாமா அங்கே வந்து 'ஏம்மா, இப்படி ஆயிடுச்சேம்மா!!!' என்று அலற. டீமாக சென்ற நாங்கள் காமாக நின்று கொண்டிருந்தோம். உட்கார்ந்திருந்த பாமாவிடம், 'என்னம்மா ஆச்சு!!!' என்றோம். 'கேமாக தொடங்கியது ஷேமாக முடிந்தது' என்றாள். பார்க்க பாவமா இருந்தது. 'அட ராமா, இதுவும் உன் கேமா. தாமாக எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டு செய்வாளே ஹேமா'
'என்னம்மா இங்க இவ்வளவு கூட்டமா? கிளம்புங்கம்மா' என்றார் நர்சம்மா. 'போவோமா' என்று தலையாட்டிய ஷாமாவிடம், ஆமா என்று சைகை செய்தேன். சும்மா வெளிய வந்த நான், 'அம்மா, ஹேமா சீக்கிரமா சாதரணமா ஆகணும்மா' என்று வேண்டினேன். அங்கே இருந்த டீக்காரம்மா, 'வந்து டீ சாப்ட்டு போங்கம்மா' என்று கூற. 'அஞ்சு டீ தாங்கம்மா' என்று கூறி நாங்கள் மௌனமா நின்றிந்தோம். 'போண்டா வேணுமா?' என்ற அந்த அம்மாவிடம், 'வேண்டாம்மா' என்றோம்.
அங்கிருந்து ஓடி வந்த பாமா, 'ஷாமா, ஹேமா!!! மாமான்னு கூப்பிட்டா' என்று கூற. 'அம்மா, நன்றிம்மா' என்று கூறிவிட்டு என் கால்கள் ஹேமாவை நோக்கி ஓடின. 'பணம்மா.... அட... பணம்மா... ' என்று கத்திக் கொண்டிருந்தார் போண்டாக்காரம்மா.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 1:33 PM 5 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: காமெடி, சிறுகதை முயற்சி
Thursday, December 17, 2009
2080
ஜூன் 20, 2080 - மின்னல் வேகத்தில் என்னைத் தாண்டி இரு வாகனங்கள் காற்றில் சென்றன. வேகம் சுமார் மூவாயிரம் கீ.மீ.
'ச்சே..என்ன வேகமா போறாங்க... காத்துல போனா இவங்கதான் ராஜான்னு நெனப்பு', எனக்கு அருகில் தோளில் பையை மாட்டி நடந்து வந்தவர் சொன்னார். அவரது உடல் வாகில் என்னைப் போல் இருந்தாலும், வயது பதிமூன்று, பதினான்குதான் இருக்கும். இதனால் அவருக்கு ப்ரோகீரியா என்று அர்த்தம் இல்லை, இந்தக் காலத்தில் அனைத்து குழந்தைகளுமே அப்படித்தான்இருக்கின்றன. ஊரில் தண்ணீர் இல்லை, ஓசோன் படலம் முழுதும் ஓட்டையாகிவிட்டது. கடல் மட்டம் அதிகமானபடியால் மக்கள் வாழும் பகுதி குறைந்துவிட்டது.
அப்படியே நடந்தபடி வீடு வந்து சேர்ந்தேன். அடுக்கு மாடியில் ஐநூற்றி ஆறாவதுமாடி. ஹெலிபேட் போல இருக்கும் ஒரு இடத்தில் நின்று 5..0..6.. என்று சொன்னால் அடுத்த நொடியில் வீட்டு வாசலில் நிற்கலாம். என்ன ஒரு விஞ்ஞான முன்னேற்றம்.
'என்ன நீங்க RPS (Radiation Protection Suit) போடாமலே போயிருக்கீங்க. நாளைக்கு ஒன்னுனா யாரு பாக்கறது?' மனைவி அக்கறையுடன் கோபத்தை காட்டினாள். என் காலத்தில் சட்டம் போட்டபோதே ஹெல்மெட் போடாமல் போன ஆள் நான். எது என்னை என்ன செய்யும். 'இல்லை, என் சூட் பழசாகுற மாதிரி இருக்கு அதான் ரொம்ப தேவைன்னா போட்டுக்கலாமேன்னு வெச்சேன்'
'சரி..சரி..எல்லாருக்கும் மாத்திரை வாங்கிட்டு வந்தீங்களா?' என்றாள் எப்போதும்போல் அதிகாரத்துடன். என்னதான் வருடங்கள் பறந்தாலும், இந்த அதிகாரம் குறையாதோ?
'என்ன மாத்திரை?' என்ன சொன்னாள் இவள், எதை நாம் விட்டு விட்டோம். இந்த தள்ளாத வயதில் நாம் வெளியில் சென்று வீடு திரும்புவதே அரிது. இதில் நாம் இதை வேறு ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமா? - 'என்ன மாத்திரைம்மா?' என்றேன் கெஞ்சலாய்.
'என்ன மாத்திரையா? TQT (Thirst Quenching Tablets) உங்ககிட்ட எத்தன தடவ சொல்லி அனுப்பினேன். அதோட விலைய வேற நாளைல இருந்து ஏத்த போறாங்களாம். ஒரு மாத்திரை ஒரு லட்சம் ரூபாய். எங்க போறது. சட்டுன்னுபோய் வாங்கிட்டு வாங்க. RPS போட்டுக்க மறக்காதீங்க' என்று அக்கறையுடன்கூறி சமயலறையில் மறைந்தாள்.
'இந்த பொம்மனாட்டிகள் இன்னும் திருந்தவே இல்லை. சமையல் செய்வது பெரியவேலையாம். சாம்பார் என்று ஒரு ரோபோட் முன்பு சொன்னால் அது செய்துகொடுக்கிறது. என்னை விடுதலை செய்துகொள்ள இந்த ரோபோட்வாங்கிக்கொடுத்திட்டேன்'
TQT, இன்று மக்கள் அனைவரும் அதற்குத்தான் அடிமை. எங்கள் காலத்தில் தண்ணீர் கேனில் வரும். இன்று தண்ணீர் என்பதே உலகில் இல்லை. தாகத்தை எப்படி தணிப்பது. அதை தவிர்க்க இதை கண்டுபிடித்த பெர்னாண்டோ பெர்லுஸ்கோனி என்பவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். இதை வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். மூளை மற்றும் நாக்கில் தாகம் ஏற்படுத்தும் நரம்புகளை இது மரத்துப்போக செய்துவிடும். எல்லார் வீட்டிலும் உள்ளே நுழைந்தவுடன் குடுக்கும் முதல் மாத்திரை இதுதான். தங்கள் குடும்பம் போக மற்றவர்களுக்குஎன வாங்குவோர் அதிகமான காரணத்தால், விலையேற்றம். என்னைப்போல கீழ்க்காட்டில் வாழும் மக்கள், அதாவது மாதம் நான்கு கோடி சம்பாதிக்கும் மகனின் நிழலில் வாழும் மக்களுக்கு, கடினம்தான்.
அது கிடைக்கும் கடை மிகவும் தூரம். இங்கிருந்து Intra Air Shuttle பிடித்துஅடையார் சென்று அங்கிருந்து Air Space Rider பிடித்து விழுப்புரம் செல்லவேண்டும். போக வர கண்டிப்பாக ஒரு மணிநேரம் ஆகும். Air Pit Stop இதுதான் அதன் நிறுத்தம். இன்றும் பிச்சைகாரர்கள் உள்ளனர். பாவம், RPS இல்லாமல் அவர்கள் உடல்களில் பல பொத்தல்கள். எல்லாருக்கும் நூறு ரூபாய் தாள்களை வீசினேன்.
IAS21 வண்டி வந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். மக்கள் அனைவரும் ஜோதியில் ஐக்கியமானார்கள். அதில் இருவர் பேசியது எனக்கு சம்மட்டியில் அடித்தது போலஇருந்தது.
'இந்த நமக்கு முன்னால இருந்த மனுஷங்க இந்த பெட்ரோல் அது இதுன்னு உபயோகிச்சு நம்மள நாசப்படுத்தீட்டாங்க'
'அது கூட பரவாயில்லீங்க தண்ணிய கூட நமக்கு மிச்சம் வைக்காம தீர்த்துடாங்க, வாயில நல்ல கெட்ட வார்த்தை வருதுங்க'
என் காலத்தில் உபயோகித்த மற்றும் இருந்த இயற்கை வளங்களை இவர்கள் திரைப்படங்களை பார்த்து தெரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் சொன்னதும் உண்மைதானே, கிட்ட இருக்கும் கடைக்கு கூட வண்டியிலதானே செல்வோம். கேட்டுக்கொண்டு, எதிர்த்து பேசமுடியாமல் உட்கார்ந்துவந்தேன்.
மாத்திரை வாங்கி வருவதற்குள் மணி ஒன்றாகி இருந்தது. எப்போதும்போல் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொன்னதற்கு எதிர்மாறாய் அதிக வெயில்அடித்து தள்ளியதில் எனது RPS பொத்தல் போட்டுவிட்டது. இதை எப்படியாவதுமகனிடம் சொல்லி வாங்கவேண்டும். எந்த காலமானாலும் பிள்ளைகள் அம்மாவின் சொல்லைத்தான் கேட்பார்கள். மனைவியிடம் சொல்லவேண்டும்.
'தம்பி, அப்பாவோட RPS பொத்தல் விழுந்துருச்சு புதுசு வாங்கி கொடுத்துட்டு, கம்பெனி-ல திரும்ப வாங்கிருப்பா'
'அம்மா, கம்பெனி பாலிசி மாத்திட்டாங்க. அப்பா, அம்மாவெல்லாம் கவர்பண்றதில்லம்மா. அட்ஜஸ் பணிக்க சொல்லு, அப்புறமா டீல்-ல வாங்குவோம்.'
இந்த மாதிரி அவன் சொல்லுவான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. மீண்டும்அந்த RPS மாட்டிக்கொண்டு கோபமாக வெளியில் சென்றேன். இந்த கொடுமைக்கு, அவர்கள் சொன்னது போல 2012-இல் உலகம் அழிந்திருக்கலாமே. அந்த மரணவெயில்லில் எனது உடலில் பொத்தல் மேல் பொத்தலாய் போட்டு ரத்தம் பீயிச்சிஅடித்தது.
கை, முகம் மற்றும் உடம்பை தேய்த்தவாறே நான் எழுந்தேன். இது அனைத்தும்கனவா??? மிக கொடூரமாய் இருக்கிறதே.
அன்று காலை ஆபிஸ் கிளம்பும் வரை நான் ராகினியிடம் எதுவும் பேசவில்லை.
'என்னங்க, என்ன சீக்கிரம் குளிச்சுடீங்க, தினமும் அரைமணிநேரம் குளிப்பீங்க'
'இல்ல, சும்மாத்தான்'
'இந்தாங்க கார் சாவி...'
'இல்லமா... ஆபீஸ் இங்கதானே இருக்கு. நடந்தே போறேன்'
என்னால் வருங்காலத்தை மாற்றமுடியும் எனும்போது, மற்றவர்களால் முடியாதா. நம்பிக்கையுடன் நடந்தேன்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 7:50 PM 8 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி, சீரியஸ்
Friday, December 11, 2009
தாகம்
சுட்டெரிக்கும் வெயில், கண்ணிற்கு எட்டிய அந்த தூரத்தில் கானல் நீர் அலையாடிக் கொண்டிருந்தது. சென்னையில் கோடைக் காலம் என்றாலே இதுதானே காட்சி. இந்த வெயிலில் தன் முன்நெற்றியில் துளிர்த்த வியர்வையை கைகுட்டையில் துடைத்துக்கொண்டிருந்த அவர். வயது நாற்பதிற்கும் மேல் இருக்கும் என்பதை அவரது முன் மற்றும் பின் வழுக்கை அறிவித்துவிட்டிருந்தது. பெயர் குப்புசாமி. உப்புசாமி என்று இருக்கவேண்டும், இந்த மனித வெள்ளத்தில் தினமும் கரைந்துவிடுவதால். அனைத்து பேருந்துகளிலும் மக்கள் வெள்ளம் பேருந்தில் கையும் வெளியில் உடலுமாய் தொங்கிக்கொண்டு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்களது பயணம் இந்த வாழ்கையில் எதை நோக்கி, இந்த கேள்விக்கான பதிலை அவர்களுடன் சேர்ந்தரிய பயணப்படும் ஒரு சாதாரண மனிதர், குப்புசாமி.
அதோ வந்துவிட்டது 21L, படியிலிருந்து இறங்கிய கூட்டத்தை தாண்டி உள்ளே சென்று தன்னை அங்கிருந்த ஒரு சிறு சந்தில் பொருத்திக்கொண்டார். இளவயதில் படிக்கட்டில் பயணப்பட்ட ஜீவன்தான் அவர். இப்போது, வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மகன் முகம் மாறி மாறி வருவதால் எப்போதும் தன்னை பேருந்தினுள் பொருத்திகொள்ளும் சாதாரண குடும்பஸ்தர். அடையாரில் இருக்கும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஹெட் கிளார்க். மாதம் ஆறாயிரம் ருபாய் சம்பளம். வாங்கும் சம்பளம் வாயிக்கும் வயிற்றிற்கும் போதுமாகத்தான் இருக்கிறது, இதில் வாங்கியிருக்கும் டி.வி.எஸ் வண்டிக்கு எங்கிருந்து பெட்ரோல் போடுவது. வாய்திறக்காமல் குடும்பம் நடத்தும் மனைவி, பையன் பனிரெண்டாம் வகுப்பு, ஆஸ்துமா நோயால் அவதிப்படும் அப்பா. இந்த கதியில் போனால், என் பையனும் என்னைப் போல் ஆகிவிடுவான். கூடாது. என்ன செய்ய? இதைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் இவரது மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் பட்டிமன்றம், ஒரு பெரும் போராட்டம்.
அறிவு: படிக்கும் போது ஒழுங்கா படிச்சுருக்கலாம்.
மனம்: மனதிற்கு பட்டதைதானே அப்போது செய்தோம். என்.சி.சி மட்டும் என்.எஸ்.எஸ் என்று சமூகத்திற்க்குதானே சேவை செய்தோம்.
அறிவு: சமூகம் நமக்கு ஒன்னும் உதவி பண்ணலையே இப்போது
மனம்: எதையும் எதிர்ப்பார்த்து செய்யவில்லையே அப்போது
அறிவு: கூடப் படித்த மாணவர்களெல்லாம் கார், பங்களா என்று வசதியாய் இருக்காங்களே, இங்க சம்பளம் வரதும் தெரில போறதும் தெரிலையே
மனம்: ஒப்பிட்டு பேசக்கூடாது. கனவுகள் கொள்ளையாய் கொட்டிக் கிடக்கிறது. அதை நிஜமாக்க ஏனோ தயக்கம், குடும்பத்தை நினைத்து பயம்.
அறிவு: மனது வைத்தால் முடியும், மனதுதான் அனைத்து கோளாறுக்கும் காரணம்.
மனம்: அறிவு இருக்கிறது, அதை உபயோகப் படுத்த தெரியவில்லை. இதில் எனக்கு என்ன சம்மந்தம்.
மனம் சொன்னது, அறிவு சொன்னது இரண்டுமே நிஜம்தானே. கல்லூரியில் படிக்கும் காலத்தில் எத்தனை கனவுகள், தொழில் தொடங்க, பட்டாளத்தில் சேர என.
பாலைவனத்து நீரோடையாய்
பசித்தவன் எதிர்பார்ப்புகள்
கானல்நீர்க் கனவுகள்!
கானல்நீர் கனவுகள்தான் வாழ்க்கையோ... !!!
இந்த முறை இந்த போரட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்று அவர் நேற்றே முடிவெடுத்துவிட்டாரே. முதலாளியிடம் சம்பளம் அதிகமாக்க விண்ணப்பம். அந்த அதிக சம்பளத்தை சேர்த்து வைத்து சின்னதாய் ஒரு தொழில் தொடங்க முடிவெடுத்துள்ளார். நல்ல தீர்க்கமான முடிவு. பிறகு என்ன செய்வார், பெயர்தான் ஹெட் கிளார்க், முதலாளி சொன்னால் கணக்கு பார்ப்பது முதல் கழிவறை கழுவும் வேலை வரை செய்ய வேண்டியுள்ளது. பதினைந்து வருடங்களாக வேலை பார்த்ததில் மிஞ்சியது இவ்வளவுதான். 'இன்று கேட்டுவிடுவோம்' சரியானமுடிவு.
'அடையார் டெர்மினஸ் இறங்கு...இறங்கு...' நடத்துனர் அறிவித்தார்.
'சந்தோஷ் எக்ஸ்போர்ட்ஸ்' பெரிய பெயர்ப் பலகை. உள்ளே சென்றார். மேஜைமேல் அவரைவிட உயரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகள். லெட்ஜர்கள். சலிப்புடன் தொடங்கியது வேலை. 'எப்படி ஆரம்பிப்பது? நேரவே போய் கேட்டுரலாமா?' ஒவ்வொரு கோப்பாய் எடுத்து வைத்தபடி சிந்தனையை தட்டி விட்டார்.
'சாமி சார், முதலாளி கூப்பிடறார்', பியூன் முனுசாமி டேபிளில் டீயை டொக்கென்று வைத்துவிட்டு சொன்னான்.
'நாம் யோசித்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ, வேற என்ன விஷயமா இருக்கும். எதாவது கொடேஷன்ல தப்போ' என்று முதலாளியின் அறைக்கதவை தட்டும்முன் இவ்வளவு சிந்தனைகள் அவரது மனக்கதவை தட்டிப் போயிருந்தது. 'எக்ஸ்க்யுஸ் மீ சார்' என்றார் தயங்கியபடி.
'வாங்க மிஸ்டர் சாமி, உக்காருங்க'
'இருக்கட்டும் சார், ஏதோ வர சொன்னீங்களாமே'
'ஆமாம், குட் நியூஸ். நீங்க பண்ண கொடேஷன் மூலமா நமக்கு ஒரு கோடி ரூபாய்க்கான டீல் கிடச்சுருக்கு, ஐ யாம் வெரி க்ளாட்'
'ரொம்ப நல்லது சார்'
'உங்களுக்கு சம்பளம் ஜாஸ்தி பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன் சாமி, மாசம் ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி'
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது சாமிக்கு, 'சார், ரொம்ப நன்றி சார்' கண்ணீர் மல்க.
'அட, இதுல என்ன இருக்கு. நீங்க போங்க...'
இடத்திற்கு வந்ததில் இருந்து வேலை சூடுபிடிக்க, கதிரவன் சாய்வதற்குள் அனைத்து கோப்புக்களும் சரி பார்த்தாகிவிட்டது.
'முனுசாமி, ஐயா கேட்டா நான் வேலையெல்லாம் முடிச்சுட்டேன், கேளம்பீட்டேனு சொல்லு' என்று சந்தோஷம் பொங்க வெளிய வந்தார். இந்த பணத்தை சேத்து வெச்சு சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரமிக்கலாம். கமலம் வீட்டுல சும்மாத்தான இருக்கா, அவ பாத்துக்கட்டும். இல்லாட்டி லோன் அப்ளிகேஷன் போட்டு ஒரு சின்ன இன்டர்நெட் சென்டர் ஆரமிக்கலாம். கமலத்துகிட்ட இந்த விஷயத்த சொல்லணும்.
வீட்டிற்க்குள் நுழையும்போதே, அப்பாவின் இருமல் வரவேற்ப்பை வழங்கியது. கை கால்களை கழுவிக்கொண்டு வந்தவுடன், அன்பான மனைவி எப்போதும் போல டிபன் ரெடி செய்து வைத்திருந்தாள்.
'கமலம் உன்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்'
'சொல்லுங்க'
'முதலாளி என்ன இன்னிக்கு பாராட்டி சம்பளத்துல ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி பண்ணிருக்காரு. அத வெச்சு...'
'அப்பாடா... ரெம்ப நல்லதுங்க... நானே உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன். பையன் அரைப் பரிட்சைல வெறும் 750 மார்க் வாங்கிருக்கான். கோடி வீடு முத்தம்மா பையன் 1000 மார்க் வாங்கிருக்கான்'
'ஏன்.. இவனுக்கு என்ன குறைச்சல்... என்ன பண்ணினா துரை படிப்பாராம்?'
'அவன டியுஷன் அனுப்பனுமாம்'
'எவ்வளோ பீஸ்'
'மாசம் ஆயிரத்து ஐநூறு'
'ஓ...ஓ....'
'நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க போல இருக்கே'
'இல்ல தண்ணி கொடு... தாகத்தை போக்கிக்கணும்....'
------------------------------------------------------------------------------------------
பி.கு: கவிதைக்கு உதவிய வானம்பாடிகள் அண்ணனுக்கு நன்றி
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 3:58 PM 3 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி, சீரியஸ்
Saturday, November 14, 2009
கனவு மெய்ப்படவேண்டும்!!!
'என்னனே தெரில இன்னிக்குனு பாத்து இப்படி மழை கொட்டுது' என்று தன் மனதிற்குள் மழையை சபித்தபடி நின்றிருந்தான் மகேஷ். சரியான நேரத்துக்கு ரயில் வராத கோபத்தை மழையின் மீது காட்டி என்ன பயன்.
'பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ' அந்த ஆட்டோமாடிக் குரல் ரயில் வந்துகொண்டிருக்கிறது என்று பதினாலாவது முறை கூறியது. 'அது சரி!!! நாமளே எப்பயாவது ஊருக்கு போறோம்... நம்மளுக்கு இப்படியா....' என்று கனிவான கவனத்தை திசை திருப்பிக்கொண்டு நின்றான்.
'கூஊஊஊஉ........' பெரும் ஊளையுடன் வந்தது நீலகிரி வண்டி. அங்கு இங்கு என்று தேடிக்கண்டுபிடித்து S-8 அப்பர் பெர்த், நிம்மதி பெருமூச்சுடன், பையை அங்கு வைத்தான்.
மகேஷ், கோவை P.S.G கல்லூரியில் நான்காம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன். பிறந்தது படித்தது சென்னப்பட்டினத்தில், அம்மாவும் அப்பாவும் USA சென்றதால், கோவையில் கல்லூரிப் படிப்பு. சென்னை போக்குவரத்து அறவே துண்டிக்கப் பட்டது. இப்போது நண்பர்கள்தான் அவன் உறுதுணை, விடுமுறையில் பாதி நாள் நண்பர்கள் வீட்டில் ஓடிவிடும். படித்து முடித்ததும் அப்பா அங்கு வந்து MS பண்ணுமாறு கட்டளை போட்டுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யவே இந்த சென்னை பயணம்.
ஒருவழியாக ரயில் புறப்பட்டது, சொன்ன நேரத்தில்- ஒரு மணி நேரம் தள்ளிப் புறப்படும் என்று சொன்னார்கள். அப்பர் பெர்த்தில் செட்டில் ஆகி, சொத சொத துணியை லேசாக கைகுட்டையில் துடைத்துக் கொண்டான். சடார் என்று ஞாபகம் வந்தவனாய், தனது புதிய மாடல் 1100 போனில் தண்ணீர் போய் விட்டதா என்று நோக்கினான். நல்ல வேளையாக போகவில்லை, மிகவும் உயர் க்வாலிட்டி போன்....
'போன் எடுத்தவன் கையும்.... பேன் இருப்பவன் தலையும் சும்மா இருக்காது...', எப்போதும் போல் கடலை போடலாம் என்று சில நம்பர்களை அமுக்கி... காதில் வைத்தான்... எதிர்முனையில் 'ட்ரிங்... ட்ரிங்...' பிறகு 'ஹலோ...'
'ஹே மாமி...' ஐயர் பொண்ணுங்களை அப்படி கூப்பிடுவதுதான் வழக்கம், அவனுக்கு.
கீழே நின்று கொண்டிருந்த மாமி... 'என்னப்பா....' என்று மேலே பார்த்தார்.
'ஹோ..சாரி... போன்-ல...' என்று அசடு வழிந்தான். ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்துவிட்டு அந்த ட்ரைன் மாமி திரும்பிக்கொண்டார்.
'வெல்... யூ நோ... நான் அமெரிக்க போய்...' என்று ஆரமித்து... 'பை மாமி' என்று சொல்லி போனை வைக்க ஆனா இடைப்பட்ட நேரம் ஒரு மணி நேரம். அதற்குள் திருப்பூரை தொட்டுவிட்டது வண்டி. மணி பத்து.
தினமும் பனிரெண்டு மணிக்கு தூங்கிய அவனுக்கு, தூக்கம் வர இலகுவாக இருக்கும் என்று அறிவாளித்தனமாக 'இந்தியா 2020' என்று Dr. அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை எடுத்து வைத்தான். சரியாக கண்ணைக்கட்டிக் கொண்டுவரும் வேளையில்,
'எக்ஸ்க்யுஸ் மீ...' என்று ஒருவர் காலைத்தட்டினார்.
விடுதி ஞாபகத்தில் 'எவண்டா அவன்!!!' என்று எழுந்தவனை. 'நான் திருப்பூர்ல ஏறினேன். நான் கொஞ்சம் ஒசரம் நீங்க லோவர் பெர்த் எடுத்துக்கறீங்களா?' என்றார்.
தூங்கரதுல உசரம் என்ன குள்ளம் என்னையா என்று மனதில் நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான்.
மறுபடியும் 'இந்தியா 2020', தூக்கம் வர.... மறுபடியும் யாரோ காலை தடவினார்கள். 'ஷிட்....' என்று எழுந்து பார்த்தான். ஒரு சிறுவன் சட்டை போடாமல் கையில் இருந்த துணியால் ஈரமாகி இருந்த தடத்தை சுத்தம் செய்துவிட்டு காசு கேட்டான். இருந்த கோபத்தில் 'காசெல்லாம் இல்ல போப்பா... உன்ன யாரு சுத்தம் பண்ண சொன்னா....' என்று கத்திவிட்டான்.
சிறிது நேரம், தான் அப்படி கத்தியது சரியா தவறா என்று புரியாமலும், புத்தகத்தில் மனம் செல்லாமலும் கனா கண்டுகொண்டிருந்தான். புரண்டு படுத்தபடி தூங்கியும் போனான்.
மணி ஒரு இரண்டு இருக்கும், எழுந்து பாத்ரூம் செல்லலாம் என்று எழுந்தவனை கடந்து ஒரு சிறுவன் ஓடினான். அதே சிறுவன்...ஆனால் சட்டை.... எப்படி... அவன் தடத்தை துடைத்த துணி... அவன் மனதை ஏதோ போட்டு அழுத்துவது போல இருந்தது.
மீண்டும் வந்து படுத்தவனை தூக்கம் அணைக்கவில்லை. இரவு முழுவதும் ஒரே யோசனை... 'என்ன செய்யலாம்?.. உலகில் இன்னும் பலர், குழந்தைகள் மிகவும் அடித்தட்டில் இருக்கிறாகளே, தன்னால் ஏதாவது செய்ய முடியுமா? என்ன செய்ய முடியும்... நான் ஒரு சாதாரண மனிதன்... மனபலம் இருக்கலாம், பணபலம் வேண்டுமே. என்ன செய்வது? ஏது செய்வது?' என்று பலத்த சிந்தனையில் ஆழ்ந்து திரும்பி படுத்தவன் பார்வையில் 'இந்தியா 2020' பட்டது. Dr. அப்துல் கலாம், கனவு காண் என்று சொன்னது அவனது நினைவிற்கு வந்தது. அதில் ஒரு முடிவும் வந்தது.
காலை ஆறு மணி, நீலகிரி விரைவு வண்டி சென்னை சென்ட்ரலை அடைந்தது. உடனே தனது உயர் ரக போனை எடுத்து நண்பனுக்கு அலைபேசினான்.
'மச்சி... பிளான் மாத்திட்டேன்டா... சீரியஸ் மேட்டர் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் நேர்ல வந்து சொல்றேன்...' என்று துண்டித்தான்... அலைபேசி இணைப்பை...
தொடங்கினான் கனவு காண....
(இதில் பாதி கதை எனது நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்)
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 9:36 PM 4 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி, சீரியஸ்
Tuesday, November 10, 2009
அழகு
அழகு என்றாலே அவள்தானே என்று அவனுக்குத் தோன்றியது.
பெண்ணின் முகத்தை நிலவுடன் ஒப்பிட்டு அழகு என்று கூறுவார்கள். நிலவு என்ன அவ்வளவு அழகா? அங்கங்கே கருப்படித்து. இல்லை.. இல்லை... இனி ஒரு விதி செய்வோம், அழகென்றால் அவள் முகத்துடன்தான் ஒப்பிடவேண்டும். அங்கே பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியரை ஜன்னலின் வழியே பார்த்தபோது, அவள் சிரிக்கையில் அவளின் கன்னக் குழியில் பல்லாங்குழி விளையாடலாமே என்ற யோசனை அவனுக்கு உதித்தது.
வெண்ணிற முத்துகள் அவள் பற்கள் போல இருக்கும். கண்களினால் அனைவரையும் தன்பால் இழுத்து விடுவாளே, கள்ளி. அவளருகே செல்லுவதையே கர்பக்ரகதினுள் செல்லும் பக்தன் போல பெருமையாய் நினைக்கும் கூட்டத்தின் நடுவே, அன்று என்னருகில் பேருந்தில் அமர்ந்தாலே. என்ன வாசனை பவுடர் போட்டிருந்தாள், நானும் கடையில் விற்கும் அனைத்து பவுடர்-உம் வாங்கிப் பார்த்துவிட்டேனே. ஒரு வேலை பாண்டிய மன்னனின் சந்தேகம் போல பெண்களின் உடலுக்கும் எதாவது வாசம் உண்டா?
சுண்டினால் ரத்தம் வருமாமே அந்த வெள்ளைக் காரர்களுக்கு, வரச்சொல்லுங்கள் பாப்போம். இவளுக்கு சுண்டுவோம் என்ற எண்ணம் எழுந்தாலே ரத்தம் வருமே. சில்லறையை கொட்டியது போல சிரிப்பது அழகாம். சில்லறையை கொட்டி பாருங்கள் தெரியும் அதன் நாராசம். சத்தம் இல்லாமல் இவள் வடிக்கும் புன்னகையைப் ரசிக்க நான் முன்னூறு வருடம் தவம் கிடக்க தயார்.
அன்று மழையில் நனைந்து வந்த அவளின் கார்மேக கூந்தலில் இருந்து சொட்டிய துளிகள், மழையினுள் மழையாகவே தெரிந்ததே. ஒளியிலே தெரிந்த தேவதையில்லை இவள், இருளில் ஒளி தருகின்ற தேவதை.
'ஓகே பசங்களா, என்ன அழக பத்தி எழுதீட்டீங்களா? நேரம் முடிஞ்சது, பேப்பர் குடுங்க' என்ற ஆசிரியரிடம் தான் யோசித்த அனைத்தையும் எழுதாமல் வெறும் பேப்பரை கொடுத்துவிட்டு அவளை நோக்கினான், கவிதை எழுதிய மகிழ்வோடு.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 2:34 PM 3 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சிறுகதை முயற்சி