Monday, January 04, 2010

வெளியுலகம்-1


அந்த கிழக்கு மேற்கை பார்த்த அந்த சிறிய அறையில், தற்போது வெயில் இல்லை. காலையிலும், மாலையிலும் வணக்கம் சொல்லிச்செல்ல வரும் கதிரவன், தனது வேலையை நேர்க்கோட்டில் செய்துகொண்டிருந்தான். இந்த ஒளியிருந்தும், இல்லாத நேரத்தில் புத்தகம் படிப்பது ஒரு தனிசுகம். கண்டிப்பாக மணி பனிரெண்டை தாண்டியிருக்க வேண்டும். அது சோத்துக்கட்சியின் தட்டு தட்டும் கூடம் வெளியே வந்துவிட்டதே.

விட்டதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
'டிங்...டிங்...டிங்.. ராஜேஷ் தம்பி..சாப்பிட வாப்பா..இங்க நீ சாப்பிட போற கடைசி மதியசோறு.. உனக்கு நினைவிருக்கில்ல நாளைக்கு உனக்கு ரிலீஸ் தம்பி..' அவர் சொல்லிச்சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், இருந்தாலும் அவரது வருத்தம் தரித்த வரிகள் இவன் காதில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவனது துன்பத்தில் கை கொடுத்த ஒரே ஜீவன் ஜைளீர் கந்தசாமி அண்ணன்தான். புத்தகங்கள், படிக்க உதவியது என்று சிறையில் இவர்தான் அவனதுதந்தை.

ராஜேஷ் இங்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல குடும்பத்தில் பிறந்த பையன். அப்பா கவர்மென்ட் ஆபிசில் குமாஸ்தா. நன்கு படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குள்ளும் இருந்தது. சில விஷயங்களை அவர் அவர்களே சொன்னால் நன்றாக இருக்கும்.

நான் ராஜேஷ், வயது 17. பனிரெண்டாம் வகுப்பில் ஏதோ அதிர்ஷ்டவசமாக நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் இன்று இந்த பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். சென்னை, புதிய நண்பர்கள், பெண்கள். நான் படித்த பள்ளிகளில் எல்லாம் பசங்கதான். இன்று புதியதாய் பெண்களை பார்க்க ஒரு மாதிரியாய் இருந்தது. காரிலே வந்தே இறங்கி அங்கே இங்கே என்று வேடிக்கைப் பார்த்து நின்றிருந்தேன். சாமான்களை எடுத்து வைக்குமாறு அப்பா அதட்டியதில், 'எடுத்து வெச்சுட்டுதான் இருக்கேன், சும்மா கத்தாதீங்க!!!' என்று கத்தினேன். எனது கோவம் உலகறிந்தது. எங்கு போனாலும் கோவப்படுவேன், எனது பள்ளியில் எனக்கு மதிப்பெண் போடாத வாத்தியாரை திட்டியதில் பத்து நாள் சஸ்பென்ஷன் வாங்கினேன். நான் கத்தி அடங்கியபின் எனது அப்பா அம்மா, 'புது இடம், புது மக்கள் கோவப்பட்டு, ராகிங் அது இது ன்னு எந்த பிரச்சனையும் இல்லாம பாத்துக்கோ கண்ணு' என்று சொல்லிச் சென்றனர். 'சரி கிளம்புங்க, கப்பித்தனமா பேசிகிட்டு ' என்று மனதிற்குள் அவர்களை வைதேன். அவழ்த்து விட்ட கழுதை இல்லையா..

திலக், எனது ரூமில் இருந்த நண்பன். அவன் ஊரு கோயமுத்தூர். ஊட்டியில் படித்தானாம். ஆங்கிலத்தில் சும்மா வெளுத்துக்கட்டுவான். அவன்கூட இருந்தால் ஆங்கிலம் பேசக் கற்றுகொள்ளலாம் என்று எனக்கு எண்ணம். எங்கேயும் சேர்ந்துதான் சுத்துவோம். கான்டீன், கேர்ள்ஸ் ஹாஸ்டல் பின்னால் இருக்கும் ரோடு என சுற்றுவோம். அப்போதுதான் ஆரமித்தது வினை. ஒரு நாள் நாங்கள் கேர்ள்ஸ் விடுதி பக்கம் போகையிலே பிடித்தான் வெற்றி. எங்கள் சீனியர். பகலிலேயே குடிப்பான் போல, கண்கள் சிவந்து கேப்டன் கண்கள் போல இருந்தது. அவன் MLA பையன். என்னைவிட திலக் கொஞ்சம் ஸ்மார்டாக இருப்பான். அவனை வம்பிற்க்கிழுப்பதே அந்த சிவந்த கண்ணனின் வேலை. கோவம் பொத்துக்கொண்டு வந்தாலும், பல்லைக் கடித்து அடக்கிக் கொள்வேன்.

ஊர்வசி, எங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு தேவதை. பதிவேட்டில் அடுத்தடுத்த பெயராய் இருப்பதால் திலக் பென்சில் பேனா என்று வாங்கி ஓரிரு மாதத்தில் அவளை மடக்கிவிட்டான். அதெப்படி இவனுங்களுக்கு மட்டும் அப்படி அமையுதோ. இது ஒருபுறமிருக்க, ஒரு அழகான பெண் ஜூனியராய் வந்துவிட்டால் இந்த சீனியர் பசங்க விடும் ஜொள்ளை சொல்லிமாளாது. அப்படி அவளைப்பார்த்து வெற்றியும் ஜொள்ளு விட்டான். இந்த விஷயம் தெரிந்த திலக் அவளிடம் வகுப்பறையில் பேசும்போதெல்லாம், வெற்றி வருகிறானா என்று பார்த்து சொல்லும் வேலை எனக்கு. இதை கேவலமாக பல நண்பர்கள் ஓட்டி தள்ளுவார்கள். 'ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால்... எனக்கொரு காதல் அமையாதா' என்று நம்பிக்கையுடன் அவனுக்கு உதவி செய்தேன். இவனிடமிருந்து அங்கு சிட் பாஸ் செய்வதும், அங்கிருந்து இங்கு பதில் வருவதுமாய் அவர்களது காதல், சாரி நட்பு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது.

இப்படி ஒருநாள் நான் வெளியே நின்று காவல் காக்கையிலே வந்தான் அந்த கருத்தமச்சான் வெற்றி.
'டேய்.. எங்கடா அந்த ****'
'அண்ணே... யாரு..'
'அதாண்டா உன் கூடயே சுத்துவானே...அந்த நாதாரி...' சத்தம் கேட்டு வெளிய வந்தான் திலக்.
'டேய்.. இன்னாடா அவ பின்னாடி சுத்துரியாமே... அவ உன் அண்ணிடா டோமரு...' என்று கத்தினான்.. கூட்டம் கூட ஆரமித்தது.
'நீங்க வீணா எங்க விஷயத்துல தலையிடுறீங்க..நல்லதில்ல' திலக் எதிர்த்து பேசினான்...
'என்னடா தல வாலுன்னு பேசற... பேண்ட்ட கழட்டுரா' என்றான்.. இப்போது கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன...
'கழட்டுரா நாயே'
'இங்க வேணாம் அண்ணே.. நைட் உங்க ரூம்க்கு நானே வந்து கழட்டுறேன். பொண்ணுங்கல்லாம் இருக்காங்க' திலக் கெஞ்சினான்.
'நைட் நீ என்னடா ரூம்க்கு வரது... அவளையே என் ரூம்க்கு வர வைப்பேன்டா.. இப்போ கழடுரா இல்ல என் ஆளுங்க உன் பேண்ட்ட அவுப்பங்க' என்றான் திமிராய்...
எனக்கு வந்த கோவத்தில்,'டாய்...' என்று கையை ஓங்கி முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தேன். சுவற்றில் உட்கார்ந்திருந்த அவன், பின்னால் சாய தலைக் குப்புற கீழே விழுந்தான். நான்கு மாடி அவன் சென்றதை பார்த்தேன், ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது. க்ஷண நேரத்தில் என்னை எல்லாரும் கொலைகாரனைப்போல் பார்க்க. அவன் ஆட்கள் MLA-விற்கு அலைபேச. நாள் கொலைகாரானாக ஆகிவிட்டேன். ஆக்கப்பட்டேன்.

அதற்குபிறகு, நான் சுயநினைவிற்கு வருவதற்குள் போலீஸ் அங்கு இருந்தனர், கல்லூரியிலிருந்து என்னை விளக்கியிருந்தனர். அப்பா, அம்மா வந்துகொண்டிருந்தனர். MLA அவரது பிள்ளை மீது படுத்து கதறி, என்னை சும்மாவிடப்போவதில்லை என்று சூளுரைத்துக் கொண்டிருந்தார். என்ன அருகில் வரக்கூட என் கல்லூரி, மன்னிக்கவும் எனது முன்னாள் கல்லூரி நண்பர்கள் தயங்கினர். திலக் உட்பட.

அப்பா அம்மா அங்கு வந்து சேர்ந்தனர். விஷயம் அறிந்ததும், அவர்களும் எனது கோவத்தை சாக்காய் வைத்து நான்தான் செய்திருப்பேன் என்று நம்பினார். அவர்கள் என்ன செய்வார்கள், சுற்றி இருக்கும் சாட்சியங்கள் எனக்கு எதிராய் அமைந்துவிட்டதே.
'ஏண்டா, எத்தன தடவ சொல்லிட்டு போனோம்...இப்படி பண்ணிடையே டா...' அம்மா கண்ணீருடன் கத்தினார்...
'அம்மா... இல்லம்மா...நான் இல்லம்மா'.. அவர்களது சத்தத்தில் எனது சத்தம் அமிழ்ந்துபோனது.
'இனிமேல் ஊர்க்காரங்க மூஞ்சில எப்படிடா முழிப்பேன், நம்ம குடும்ப மானத்த வாங்கிட்டயேடா.' அப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
'இனிமேல் என் மூஞ்சிலையே முழிக்காதடா... வாடி போகலாம்' அப்பா அம்மாவையும் கூடிச்சென்றார்.... வருவார்.. என்று நம்பினேன்... நம்புகிறேன் இன்றுவரை...

பிறகு வழக்கு கோர்ட் அங்கு இங்கு என்று சென்று எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வந்தது. எனக்கென அழுக ஒரு கண்கள் கூட இல்லை, என் கண்கள் கூட இல்லை.

சிறை, கொள்ளையர்கள், கொலைகாரர்கள் கூடாரம் என்று எண்ணிய நான், என்னைப்போலவும் சிலர் இங்கு இருப்பர்களோ என்று எண்ணத்தொடங்கிய இடம். வந்த ஒரு மூன்று மாதங்கள் யாருடனும் தொடர்பற்று இருந்தேன். சிலர் கந்தசாமி அண்ணன், உறவுகளற்ற எனக்கு ஒரு உறவை இருந்தவர், அவருடன் மட்டும்தான் நான் பேசுவேன். எனது கதையைக் கேட்ட அவர், ஏதாவது படிக்கிறயா என்று கேட்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் சேகுவேரா போன்றவர்களின் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். எனக்காக மேலிடத்தில் போராடி சென்னை பல்கலைகழகத்தின் அஞ்சல் வழி முறையில் இளங்கலை அறிவியல் பட்டம் படிக்க உதவினார். ஓரிரு மாதங்கள் கழித்து, என்னிடம் வந்த கந்தசாமி அண்ணன். 'தம்பி, இங்க இருக்கறவங்க எல்லாரும் தப்பானவங்க கிடையாது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவங்கள குத்தவாளியா ஆக்கிருச்சு. அவங்களுக்கும் படிக்கணும், தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கு. நீ ஏன் இவங்களுக்கு சும்மா தெரிஞ்சதை சொல்லித்தரக்கூடாது? உனக்கு எல்லா புத்தகங்களும் நான் வாங்கித்தரேன்' எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்த பெரியவரின் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.

எனது வகுப்பறை மாணவர்கள்,

மார்த்தாண்டம், தன் மனைவியை கொன்றுவிட்டு வந்தவர். எதனால் என்று நான் கேட்கவில்லை. ஆயுள்தண்டனை கைதி.
சுப்ரமணி, சின்ன சின்ன திருட்டுகள் செய்து வருபவன். வயிற்றுப் பிழைப்புக்காக.
மனோஜ், கூலி வேலை செய்து வந்தவன், தன் முதலாளியை அடித்துவிட்டு வந்திருந்தான்.

இவர்களுக்கு அ, ஆ முதல் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லித்தந்து வந்தேன். அவர்களும் என்னை செல்லமாக குரு என்று அழைப்பார்கள். மார்க்ஸ் மீது ஏற்ப்பட்ட பற்றினால் நானும் தாடி வளர்க்க ஆரமித்தேன். இங்கும் அரசியல் மற்றும் ரவுடித்தனம் செய்து வந்த சிலர் இருந்தனர். அவர்கள் இல்லாத பக்கமாய் பார்த்து கந்தசாமி அண்ணன் எங்களுக்கு தச்சு வேலை செய்யும் இடத்தில் வேலைப் போட்டுக் கொடுத்தார். கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டுவந்தேன். மூன்று வருடங்கள் ஓடின. வகுப்பில் மாணவர்கள் அவ்வப்போது கூடியும் குறைந்தும் இருந்தனர். நானும் நல்ல மதிப்பெண் எடுத்து இளங்கலை பட்டம் முடித்துவிட்டேன். மீண்டும் படிக்க இருந்த ஆர்வத்தால் முதுகலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது.

புத்தகங்கள், எனது உற்ற நண்பன். எனது அறை முழுவதும் புத்தகங்கள். வேலை நேரம், பாட நேரம் தவிர மீதிநேரம் புத்தகத்துடன் கழிந்தது. சுஜாதா, பாலகுமாரன், கர்ட் வன்னகேர்ட், அயன் ராண்ட், கப்ரியல் க்ராசியா மார்குவேஸ் போன்ற பல எழுத்தார்கள் என்னுடன் அந்த சிறை அறையில் வாழ்ந்தனர். நானும் சில கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத ஆரமித்தேன். இப்படியாக அடுத்த இரண்டு ஆண்டுகள் ஓடின. முதுகலையும் முடித்துவிட்டேன். வெளியே சென்றால் நல்ல வேலை கிடைக்குமென கந்தசாமி அண்ணன் நம்பிக்கை தெரிவித்தார். அப்படி சொல்லும்போதெல்லாம், அவரது கண்ணில் நீர் துளிர்க்கும். நான் அவரைவிட்டு செல்கிறேன் என்ற காரணத்தால்.

இந்த ஆறு வருடத்தில் என்னை பார்க்க யாருமே வரவில்லை, ஒரு வேளை நான் நன்கு படித்து பக்குவமடைந்தது தெரிந்திருக்காது. வெளியே சென்று சொல்லுவோம்வெல்லுவோம்.

நாளை நான் விடுதலை ஆகிறேன். யார் வருவார்கள் என்னை வரவேற்க? அப்பா அம்மாவிற்கு தெரியுமா எனக்கு விடுதலை என்று. இந்த நினைவுடன் கண்ணயர்கிறேன். நாளை பாப்போம்.

(தொடரும்)




3 Comments:

vasu balaji said...

எக்ஸலண்ட் கார்த்திக். :)

thiyaa said...

அருமை,நல்ல நடை
,அழகான கதை,அழகிய ஓவியம்
நல்ல பதிவு
வாழ்த்துகள்

ஜிகர்தண்டா Karthik said...

நன்றி வானம்பாடிகள் அண்ணே

@தியாவின் பேனா - வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி :)

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online