Saturday, November 07, 2009

துள்ளித் திரிந்த காலம்

இதோ அவன் தனியாக தெருவில் நடந்து கொண்டிருந்தான், நினைவுகளை அசைபோட்ட படி. இந்த அமெரிக்கத் ரோடுகள், பலமாடிக் கட்டிடங்கள் அனைத்தும் இவனுக்கு ஏனோ இன்று புதிதாக தோன்றியது. இரவு தோன்றிய கனவு காரணமா? கனவா, இல்லை இல்லை அது அவன் வாழ்வில் முன்னாட்களில் நடந்த உண்மையே இல்லையா, பிறகு எப்படி அது கனவாகும். கனவில் அவன் கல்லூரிக்கு சென்றிருந்தான், சுற்றிப்பார்க்க. நினைவுகள், கல்லெறிந்த நீர்நிலையைப் போல் அலையோட ஆரமித்தது.

கல்லூரிக்கு வந்தபோதும் இப்படித்தானே இருந்தது அவனுக்கு, நட்பு என்றால் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் மட்டுமே அறிந்த அவனுக்கு, கல்லூரிக்கு வரும்போது என்ன தெரிந்திருக்க முடியும். ஆனால் அந்த நாலு வருடத்தில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்னும் அளவிற்கு அவனது நண்பர்கள் மற்றும் நட்பு வளர்ந்தது.

நட்பு மட்டுமல்ல, சில எதிரிகளும் இருந்தனர் அப்போது. தனக்கு பிடித்த பெண்ணைப் பற்றி இழிவாய் பேசிய நண்பர்களுடன் அவன் சண்டை போட்ட நாட்கள், இரு வாரங்கள் அவர்களை முறைத்துக் கொண்டு சென்றது. பின்னர் அவர்களிடமே, மச்சான் சாரி டா என்று கூடியது. ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று ப்ரோபசரிடம் பர்மிஷன் வாங்கி திருட்டுத்தனமாய் சினிமா சென்ற நாட்களும் அவன் நினைவில் நிழலாடின. அவன் கல்லூரி வாழ்கையில் அவன் பாதி நேரம் செலவு செய்த அந்த கான்டீன் மரத்தடி இன்று சற்றே மாற்றியமைக்க பட்டுள்ளது, மரத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால். அங்கு அவன் நண்பர்களுடன் ஜூனியர் பசங்களை கூப்பிட்டு ஷார்ஜா வாங்கிக்குடித்த ருசி நாவில் தங்கிவிட்டது. ருசித்துக் கொண்டான்.

ஏனோ அவனது கல்லூரி வாழ்கை அவனை சினிமாவின் பக்கம் இழுத்தது, நடிகனாய் அல்ல, ரசிகனாய். நேரம் கிடைத்தால் சினிமா, புதுப் படம் வந்தால் சினிமா, பரீட்சைக்கு நடுவிலும் சினிமா. ஒரு வேளை இதுதான் சினிமா பைத்தியமோ, இருக்காது. அதற்கும் காரணம் சுற்றியிருந்த நண்பர்கள்தான். பள்ளிநாட்களில் சினிமா என்றாலே ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்றிருந்தவனை மாற்றியவர்கள் அவர்கள்தானே.

திடீரென்று தோன்றினால் கூட்டமாய் கிளம்பிவிடுவார்களே, தாபாவிற்கு. விடுதியின் ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமிற்கு செய்தி பாயும். 'மச்சான், நாலு ரொட்டி, ஒரு முட்டை மசால்' என்று ஒருவன் வந்து ஆர்டர் சொல்லிவிட்டு போவான். காசு, நட்பில் காசு என்ன பெரிய விஷயம், அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை அப்போது. இப்போது இருபது ரூபாய் செலவு செய்தால், 'மச்சி இந்தா பார்சல், ட்வென்டி ருபீஸ்' என்று சொல்லுகிறோம்.பணம் பெரிதாகிவிட்டதோ. தாபாவில் இருந்து வரும் வழியில் தர்பூசணி பழக கடை, அட அந்த கடைக்காரர் 'வாரம் ஒரு முறை வந்துட்டு போங்க' என்று சொல்லும் அளவிற்கு சாப்பிட்ட நாட்கள்.

வெளியே தங்கி இருந்த நாட்களில், காரை கொண்டுவந்து போட்ட ஆட்டங்கள். நண்பன் ஒருவன் சாதாரண கடைகளில் சாப்பிடாமல், 'டேய், கொஞ்ச நாள் தாண்டா, வா சிக்கன் சம்பூர்ணா போவோம்... AP உனக்கு அங்க fried rice வாங்கிக்கோ' என்று அவனையும் சமாதானப் படுத்துவான். தினம் காலை நேவி பேக்கரியில் சூரியன் fm கேட்டு பேருந்திற்கு காத்திருந்தது எல்லாம் அவன் நினைவில் வந்து செல்ல, கண்ணீர் துளிர்த்தது. பேருந்தை கோட்டை விட்ட நாட்களில் நண்பனின் CBZ-யுடன் தனது சன்னி வண்டியை போட்டி போட்டு ஓட்டிச்சென்றதும் அவன் நினைவில் ஒரு வெள்ளோட்டம் ஒட்டி சென்றது.

டீ குடிக்க கடைக்கு போவார்கள், ஆனால் ஈரோடு போய் அங்கிருந்து வண்டி எடுத்து கோபி போய்... கொடிவேரியில் குளித்து, சத்தியமங்கலம் போய்.. அடிவாரத்தில் சாமியை கும்பிட்டு, வீரப்பன் கோட்டையை இருந்த தாளவாடி சென்று டீ குடித்த கிறுக்கர்கள் இவர்களாகத்தான் இருக்கும். அதே போல் இன்னொரு முறை காலை எழுந்து டீ கொடுக்க போலாம் என்று கூறிய நண்பனை மதியம் ஒரு மணி வரை காத்திருக்க செய்து வண்டிகளை ஏற்பாடு செய்து, பின்பு ஊட்டிக்கு வண்டியில் சென்றவர்கள் இவர்கள்தான், டீ குடிக்க. பின்னர் திரும்பி வருகையில், குளிர் தாங்காமல் ஆயிரம் ரூபாய்க்கு ஸ்வெட்டர் வாங்கியது தனிக்கதை....

இதையெல்லாம் தனது நடைப்பயணத்தில் சிந்தித்த அவன், தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்களது நம்பர்களைத் தட்டினான்....

ஒரு ரிங்... இரண்டாவது ரிங்....

'you have reached the voice message box of........'

கனவுடன் நிறுத்தி இருக்கலாமோ என்று அவன் மனம் எண்ணத் தொடங்கியது.


4 Comments:

ஜெட்லி... said...

கடைசி வரி டச்சிங்....
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்

ஜிகர்தண்டா Karthik said...

ஜெட்லி தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

Vanchi said...

Hey your blog is getting interesting.. Keep doing this man.. Write frequently... Oru anantha vikatan padicha feeling iruku... why dont you write film reviews too.. you have a future da..

ஜிகர்தண்டா Karthik said...

தம்பி நீங்க கொஞ்சம் மிகையா சொல்றீங்க.
நான் ஒரு கடை நிலை ஊழியன்.
என்னைவிட ஜித்தர்கள் எல்லாம் இருக்காங்க...

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online